காங்கிரஸ் ஒரிஜினல்; ஆம் ஆத்மி ஜெராக்ஸ்.. பஞ்சாப் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!
சண்டிகர்: காங்கிரஸ் ஒரிஜினல் என்றால் ஆம் ஆத்மி அதன் ஜெராக்ஸ் என்று பஞ்சாப் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. பஞ்சாப் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று முனைப் போட்டி நடக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பிரதமர் மோடி
பஞ்சாப் மாநிலம் பத்தோன்காட் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ''பஞ்சாப் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் பஞ்சாபை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். கேப்டன் சஹாப் காங்கிரஸில் இருந்தபோது தவறான பாதையில் செல்வதை தடுத்து நிறுத்தினார். இப்போது அவரும் இல்லை.

ரேஷன்
தொற்று நோய் இருந்தபோதிலும் பஞ்சாப்பில் உள்ள கோடிக்கணக்கான குடிமக்களுக்கு இந்தியா இலவச ரேஷன் வழங்கி வருகிறது. நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்தோம். அதற்கான ஏற்பாடுகளை நம் அரசு நாடு முழுவதும் செய்துவருகிறது.

ஒரிஜினல்
ஊழல் செய்வதில் காங்கிரஸ் கட்சி ஒரிஜினல் என்றால் ஆம் ஆத்மி கட்சி அதன் ஜெராக்ஸ். ஒருவர் பஞ்சாபை கொள்ளையடித்தார். மற்றொருவர் டெல்லி மாநிலத்தில் ஊழலில் ஈடுபட்டுள்ளார். இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டாலும், சண்டையிடுவதுபோல் நடிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் எதிரியாக நடிக்கிறார்கள். பாஜக எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கு காங்கிரஸ் கட்சி அழிக்கப்பட்டது'' என்று பிரசாரத்தில் பேசினார் பிரதமர் மோடி.

பஞ்சாப் தேர்தல்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு, பஞ்சாப்பில் பாஜகவுக்கு செல்வாக்கு குறைந்துள்ளது. இதனால், தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications