அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் ’ஷாக்’.. கட்சி நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருட்டு.. போலீசில் புகார்!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு வந்த கட்சி நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தென்காசி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளி வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணம் திருடுபோன நிலையில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளியிடம் இருந்து ரூபாய் 1 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கதான் தலைமை.. லோக்சபா தேர்தலில் யாருக்கு எத்தனை சீட்? அதிமுக முடிவு செய்யும்.. எடப்பாடி அதிரடி
மா.செக்கள் கூட்டம்
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எல்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
திரண்ட கூட்டம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.50 மணியளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வழிநெடுக அதிமுக தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். அவர் தலைமை அலுவலகத்தை வந்தடைந்ததும் மூத்த நிர்வாகிகள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைமை கழக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நெரிசல்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக தமிழக முழுவதுமிருந்து கட்சி நிர்வாகிகள் திரளாக வருகை தந்திருந்தனர். ஓவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், தங்களது ஆதரவாளர்களையும் சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அதிமுக தலைமை அலுலககம் முன்பு திரண்டு நின்றதால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்திற்கு நுழைவதே பெரும்பாடாகிவிட்டது. கூட்ட நெரிசலில் இடித்துப் பிடித்துத்தான் உள்ளே வந்து சேர்ந்தனர்.
கட்சி நிர்வாகியின் பணம் திருட்டு
இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தெற்கு ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருட்டு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவகத்திலேயே நடந்த இந்த திருட்டு சம்பவம், அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.