பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு அனுமதி.. தண்ணீர் படக் கூடாதாம்.. இனிதான் ரொம்ப உஷாரா இருக்க வேண்டும்
சென்னை: பெட்ரோலில் எத்தனால் கலந்து வினியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது எத்தனால் கலப்பு.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி எனக் கூறி, மத்திய அரசு இது பற்றி ஒரு ஆணை போட்டது.
எத்தனால் கலப்பு
இந்த உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இதனால் வாகன உரிமையாளர்கள்தான் எரிச்சலடைந்துள்ளனர். இதற்கு காரணம் இரு்ககிறது.
தண்ணீர் படவே கூடாதாம்
பெட்ரோல் டேங்க் பக்கத்தில், தண்ணீரால் கழுவும் போதும், மழை பெய்யும் போதும் பெட்ரோல் டேங்க் உள்ளே தண்ணீர் கலந்து விடக்கூடாதாம்.பெட்ரோல் டேங் மூடியை சரியாக மூடி வைக்க வேண்டுமாம். ஒருவேளை தண்ணீர் உள்ளே போனால் அவ்வளவுதான் என்கிறார்கள்.
தண்ணீராக மாறிவிடும்
பெட்ரோலில் உள்ள எத்தனாலை இழுக்க சிறிதளவு தண்ணீர் போதும். தண்ணீர் கலந்தால் பெட்ரோலிலுள்ள எத்தனால் தண்ணீராக மாறிவிடும். அது பெட்ரோல் டேங் அடியில் சென்று சேர்ந்துவிடும். இதனால் வாகனம் பழுதாக வாய்ப்புள்ளது. இதன் விளைவுக்கு வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வாகன உரிமையாளர்கள் நிலைமை
சில்லரை விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசலின் தரத்தை சரி பார்த்துக்கொள்ளலாம். விற்பனை நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு, எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது. இவ்வாறு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் கூறியுள்ளது. அதாவது முழு பொறுப்பும் மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. விலை கூடுதலாக எரிபொருளையும் போட்டுக் கொண்டு, தண்ணீர் பட்டுவிடக் கூடாதே என்ற பதற்றத்தோடும் வாகன உரிமையாளர்கள் இருக்க வேண்டும். மழை பெய்து கொண்டிருக்கும்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டாலும் வாகனம் பழுதாக வாய்ப்பு இருக்கிறது என்பதால், அச்சத்தில் உள்ளனர் வாகன உரிமையாளர்கள்.