பிளஸ் 1 பொதுத் தேர்வு நடக்குமா?.. மாணவர்களே..அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது இதுதான்
சென்னை: மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்பத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுமைகளைக் குறைக்கும் விதமாகவும், 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதாலும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இந்த கருத்தை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும்.
பொதுவாக தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக 12ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி, அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கவேண்டும். தங்கள் பள்ளி அதில் சிறந்துள்ளது என்று காட்ட வேண்டும் என்று சென்றுவிடுகிறார்கள்.
11ஆம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டால், போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக்கொள்வார்கள். அதனை கருத்தில்கொண்டு தான் இந்த 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அரசு அலுவலர்களுக்கு, அகவிலைப்படி விகிதம் 34சதவிகிதம் அளவு உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications