நீட்டில் “ஜஸ்ட் பாஸ்”.. மார்க் இல்லைனா காசிருக்கு! மேனேஜ்மண்ட் கோட்டாவில் மாணவிக்கு மருத்துவ சீட்
சென்னை: மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் நுழைவுத்தேர்வில் வெறும் 13% மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் மேலாண்மை கோட்டாவில் இடம் ஒதுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
தொடக்கத்திலிருந்தே இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

நீட் விலக்கு
ஆனால், தகுதியான மருத்துவர்கள் உருவாக நீட் போன்ற நுழைவுத்தேர்வு அவசியம் என மத்திய அரசு தரப்பிலும், பாஜக சார்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்வு
ஆனால் தமிழ்நாடு ஆளுநர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப காலம் தாமதம் செய்ததால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதினர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதியுடன் தேர்வுக்காக விண்ணப்பம் நிறைவடைந்தது.

முடிவுகள்
இந்த நிலையில், கடந்த ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 1.32 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழ்நாட்டில் தேர்வெழுதிய 1,32,167 லட்சம் மாணவர்களில் 67,787 பேர் தேர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

அரசு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு
கடந்த சில நாட்களுக்கு முன் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 455 மாணவர்களுக்கு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சீட் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 455வது இடத்தில் உள்ள மாணவி 267 மதிப்பெண்களை பற்றுள்ளார்.

என்.ஆர்.ஐ தரவரிசை
மேலாண்மை கோட்டாவில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைத்த கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. 163 மாணவர்களை கொண்ட இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மாணவி 720 மதிப்பெண்ணிற்கு வெறும் 94 மதிப்பெண்களை மட்டுமே பெற்று இருக்கிறார்.

100க்கும் குறைவான மதிப்பு
நீட் தேர்வெழுதி மருத்துவப் படிப்பில் சேர நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் 93. இந்த நிலையில் ஜஸ்ட் பாஸ் ஆன மாணவிக்கு மருத்துவ சீட் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 267 க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுதான் தரமா?
ஆனால், இந்த பட்டியலில் 100க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கூட இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு என்று மத்திய அரசு கூறிய நிலையில் 13% மதிப்பெண் பெற்றவர்களுக்கு கூட பணம் இருப்பதால் மேலாண்மை கோட்டாவில் வாய்ப்பு கிடைப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications