துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா உறுதி.. பிஎப் 7 வேரியண்ட்டா என சோதனை
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருடன் பயணித்த அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை இலங்கையிலிருந்து 70 பயணிகளுடன் ஏர்லங்கா விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பிரதீபா (39), அவரது 6 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இலந்தைகுளம் பகுதி
இதையடுத்து விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதீபா மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருவருடன் பயணித்த மற்ற பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அது போல் இலந்தைகுளம் கிராமத்திலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பிஎப் 7 வகை
இவர்கள் இருவருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை. இவர்களுக்கு பிஎப் 7 வகை பாதிப்பா என்பதை கண்டறிய அவர்களுடைய மாதிரிகள் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 6 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

துபாயிலிருந்து
இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு புதிய வகை கொரோனாவா இல்லையா என்பதை கண்டறிய மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அவர்களுடைய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இருவரும் தொற்று உறுதியானதால் அவர்களுடன் பயணித்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ரேண்டம் முறை பரிசோதனை
மேற்கண்ட இருவருக்கும் ரேண்டம் முறையில் சோதனை நிகழ்த்தப்பட்டது. இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருடன் சேர்ந்து கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிஎப் 7 கொரோனா தொற்று உறுதியாகவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications