ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கே கண்ண கட்டிடுச்சே... 20 தொகுதிக்கு இடைத்தேர்தல்னா எப்படி இருக்கும்?
Recommended Video

சென்னை : தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாகி உள்ள நிலையில் இவற்றிற்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலிலேயே கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் திணறிப்போன தேர்தல் ஆணையத்திற்கு 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவது நிச்சயம் சவாலான விஷயமாக இருக்கும்.
இந்திய தேர்தல் முறையே சிறந்த ஜனநாயக முறை என்று உலக அளவில் பெருமையாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் என்றால் அது தேர்தல் ஆணையத்திற்கு கத்தி மேல் நடக்கும் விஷயமாகத் தான் இருக்கும். திருமங்கலம் பார்முலாவில் தொடங்கிய வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கும் விஷயம் பல வடிவமெடுத்து புது புதுசாக யோசித்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகளை வழங்கும் விஷயமாக பரிணமித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்தத் தொகுதிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்றதால் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. அதன்பின்னர், மீண்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட டி.டி.வி தினகரன் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு சென்றார்.

பண மூட்டைகள்
ஆர்கே நகர் தேர்தல் முடிவு தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது என்று அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கருதினர். இதனால் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைத்தனர். பணப்பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகளைக் கூட எதிர்க்கட்சியினர் தேடிப்பிடித்தனர்.

புது டெக்னிக் டோக்கன் விநியோகம்
மற்றொருபுறம் ரூ. 20 டோக்கன் கொடுத்து அதில் இருக்கும் நம்பரை காட்டி பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற புது டெக்னிக்கும் ஒரு தரப்பினரால் அறிமுகம் செய்யப்பட்டது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தையே பரிசாக வாக்காளர்களுக்கு அளித்தார் என்ற புகாரும் எழுந்தது. இப்படி கட்டுக்கடங்காமல் வாக்காளர்களுக்கு செய்யப்பட்ட பணப்பட்டுவாடாவால் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு சவாலானதாக இருந்தது.

தேர்தல் ஆணையத்திற்கே திணறல்
வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் துணை ராணுவப்படையினர், தேர்தல் அதிகாரிகள் என்று நியமிக்கப்பட்டாலும் அவர்களால் வேட்பாளர்கள் செய்த தேர்தல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. 2வது முறையும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்று எதிர்பார்த்த நிலையில் தேர்தலை நடத்தி முடித்தது தேர்தல் ஆணையம்.

ஆர்கே நகர் தொகுதிக்கே அந்த பாடு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியவில்லை தமிழகத்தில் தான் அதிக அளவில் வாக்காளர்களுக்கு தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் வருத்தத்துடன் தெரிவித்தது. வழக்கமாக இடைத்தேர்தல் நடத்த ரூ. 70 லட்சம் வரை செலவாகும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதைவிட 3 மடங்கு அதிகமாக ரூ. 3 கோடியே 2 லட்சம் செலவானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு சவால்
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கே தேர்தல் ஆணையத்திடம் கண்ணாமூச்சி காட்டிய அரசியல் கட்சிகள் 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் என்றால் என்னவெல்லாம் செய்யப் போகின்றனவோ. தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ள நிலையில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்குமா, பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications