தமிழகம் முழுவதும் 3,01,75,410 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழகத்தில் மொத்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 3 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 3,01,75,410 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் ஒரேநாளில் 5,72,898 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமடைந்துள்ளது. பள்ளியில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக இன்று மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் மா.சுப்ரமணியன்.
தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவது, மாற்று திறனாளிகள், இணை நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி வரை மொத்தம் 37 லட்சத்து 16 ஆயிரத்து 148 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக நேற்று ஒரே நாளில் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் 200 வாா்டுகளில் தலா 2 என மொத்தம் 400 சிறப்பு முகாம்கள் அந்தந்த வாா்டில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள் அல்லது வாா்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் அமைக்கப்பட்டன.
இதில் 15 மண்டலங்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 147 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இனி வரும் நாள்களில் இந்த 200 வாா்டுகளில் 200 தற்காலிக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதளத்தின் வழியே தெரிந்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மொத்தமாக 5 லட்சம் வரை தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக ஒரு நாளில் 5.72 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று கூறிய மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை 3,01,75,410 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வாரம் 3 நாட்கள் முட்டை தினசரியும் சத்தான உணவு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
திருப்பூரில் ரைஸ்மில் ஓனர் மகன் கடத்தல்.. ரூ.3 கோடி பேரம்.. 6 மணி நேரத்தில் கும்பலை பிடித்த போலீஸ்
80 சதவிகித ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாணவர்கள் பாதுகாப்பிற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.