ஆளுக்கொரு திசையில் 3 எம்.எல்.ஏ.க்கள்... நட்பில் விரிசல்...?
சென்னை: சட்டப்பேரவை வளாகத்திற்கு இணைந்தே வந்து இணைந்தே செல்லும் வழக்கமுடைய 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்றைய தினம் தனித்தனியாக வந்துவிட்டு தனியாக சென்ற விவகாரம் தான் அங்கிருந்த காவலர்களையே ஆச்சரியப்பட வைத்தது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவரும் பொதுவாகவே நண்பேன்டா எனக் கூறுபவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத வண்ணம் சட்டமன்றத்திலும் செயல்படுவார்கள். சட்டமன்றத்திற்கு வந்தாலும், சென்றாலும் அந்த மூன்று பேரும் இணைந்து தான் இருப்பார்கள். ஆனால் குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் 3 பேருக்கும் 3 நிலைப்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தெரு தெருவாக இறங்கி போராடி வருகிறார் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.. ஆனால், கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் எம்.எல்.ஏ.வுமான தனியரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இதுவரை குரல் கொடுத்தது போல் தெரியவில்லை. அதைப்பற்றி அவர் பேசியதுகூட இல்லை என்றே தெரிகிறது. சி ஏ ஏ விவகாரத்தில் கருணாஸின் நிலைப்பாடு என்னவென்பது புரியாத புதிராகவே உள்ளது. இப்படி 3 பேரும் 3 நிலைப்பாட்டில் இருப்பது கடந்த ஆளுநர் உரையின் போதும் சரி, நேற்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் சரி 3 பேரும் தனித்தனியாக வந்து செல்கின்றனர்.
தனியரசு வழக்கம் போல் 9.30 மணிக்கெல்லாம் சட்டப்பேரவைக்குள் சென்று தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அதற்கு பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் சென்றார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஓ.பி.எஸ். நிதிநிலை அறிக்கையை படித்துக்கொண்டிருந்த போது தான் உள்ளே சென்றார். இதனிடையே குடியுரிமை சட்டத்திற்கு முன்பாக பெரும்பாலும் இந்த மூவரையும் ஒன்றாகத்தான் சட்டமன்ற வளாகத்திற்குள் காணமுடியும்.
ஆனால், இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை..!