நம்பி வந்தவர்களுக்கு வாய்ப்பளித்த தினகரன்... தகுதி நீக்கம் செய்த 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள் போட்டி!
சென்னை: அமமுக அதிமுகவுடன் கைகோர்க்குமா என்று கருத்துக்கள் பரவி வந்த நிலையில் இன்று 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தினகரன்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை இழந்த முன்னாள் அமைச்சரான பி.பழனியப்பன், என்.ஜி.பார்த்திபன், ஆர்.ஆர்.முருகன், பெ.ரெங்கசாமி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் 4 பேரும் தினகரனுடன் கடைசி வரை இருந்ததால் நன்றி மறவாமல் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் தினகரன்.

பரபரப்பில் தேர்தல் களம்
தமிழக தேர்தல் களம் கட்சிகளின் கூட்டணி தொகுதி பங்கீடு, கட்சிகளின் தொகுதி விவரங்கள் வெளியீடு ஆகிய பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று பல்வேறு யூகங்கள் வெடித்தன. ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் தானே விடை கொடுத்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

அதிமுகவுடன் சேருங்கள்
சசிகலாவின் இந்த அறிவிப்பு அவரை நம்பி இருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். தினகரன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதிமுக-அமமுக வாக்குகள் பிரிந்தால் திமுகவுக்குத்தான் லாபம். எனவே தினகரன் பழைய கசப்புகளை மறந்து அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஆனால் தினகரன் இவை அனைத்தையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நம்மை அவமானப்படுத்தியவர்கள் அணியில் மீண்டும் சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். வேறு யாருடனும் கூட்டணி சேருவது பற்றியும் அவர் சிந்திக்கவில்லை. தான் தனியாக நிற்க போவதாக அறிவித்தார். அதன்படியே செய்து காட்டி இன்று 15 பேர் கொண்ட அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் தினகரன்.

தகுதி நீக்கம்
இந்த 15 பேரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்கள் பதவியை இழந்த முன்னாள் அமைச்சரான பி.பழனியப்பன் பாப்பிராபெட்டியில் போட்டியிடுவார் என்றும், என்.ஜி.பார்த்திபன் - சோளிங்கர் தொகுதி, ஆரூரில் ஆர்.ஆர்.முருகன், பாபநாசத்தில் - பெ.ரெங்கசாமி போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் அதிமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 முன்னாள் எம்.எல்.ஏக்களில் அடங்குவர்.

நன்றி மறவாமல் வாய்ப்பு அளித்துள்ளார்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் சிலர் முதலில் தினகரனுடன் இருந்தனர். பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அவர்களில் முக்கியமானவர் திமுகவில் இனைந்த தங்க தமிழ்ச் செல்வன் ஆவார். ஆனால் பி.பழனியப்பன் உள்ளிட்ட 4 பேரும் தினகரனுடன் கடைசி வரை இருந்ததால் நன்றி மறவாமல் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் தினகரன்.












Click it and Unblock the Notifications