தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் உஷாராக இருக்க வேண்டும்.. கொரோனா வேகமாக பரவுகிறது.. மத்திய அரசு அட்வைஸ்
சென்னை: கேரளாவில் 11 மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் உட்பட 9 மாநிலங்களில் 37 மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா கேஸ்கள் அதிகரித்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தளவில் கொரோனா குறைவதால் 9ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளிகளை திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவிலும் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுக்கவும் கொரோனா குறைந்து வருகிறது. அதேநேரம், ஒரு சில மாநிலங்களில், நோய் பரவும் விகிதம் அதிகமாக உள்ளது. ஆர் விகிதம் அல்லது ஆர் எண், என்று இதை அழைப்பார்கள்.

7 மாவட்டங்கள்
அது 1 என்ற அளவுக்கு குறைவாக இருந்தால் பிரச்சினையில்லை. அதை விட அதிகரிக்கும்போதுதான், நோய் அச்சுறுத்தும் அளவுக்கான தொற்று நோயாக கருதப்படும். அந்த வகையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நோய் பரவல் கடந்த 2 வாரங்களாக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நோய் பரவல் மாநிலங்கள்
இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆர்-எண் கவலைக்குரியதாக உள்ளது. ஆந்திரா, கோவா மற்றும் நாகாலாந்து ஆகியவற்றில் ஆர் எண் அளவு 1 என்பதாக உள்ளது, என்று லாவ் அகர்வால் கூறினார். நாடு முழுமைக்கும் என்று எடுத்து பார்த்தாலும் இது 1 என்ற அளவில் உள்ளது.

9 மாநிலங்களில் 37 மாவட்டங்கள்
"9 மாநிலங்களில் 37 மாவட்டங்கள், அதாவது, கேரளா (11 மாவட்டங்கள்), தமிழ்நாடு (7), இமாச்சலப் பிரதேசம் (6), கர்நாடகா (5), ஆந்திரப் பிரதேசம் (2), மகாராஷ்டிரா (2), மேற்கு வங்கம் (2), மேகாலயா ( 1) மற்றும் மிசோரம் (1) ஆகியவற்றில் கடந்த இரண்டு வாரங்களில் தினசரி புதிய கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன.

நாட்டு நிலவரம்
சில மாநிலங்களில் பெருகிவரும் கேஸ்களின் போக்கு கவலைக்குரியது, இருப்பினும் நாட்டில் கொரோனா கேஸ்கள் நிலைத்தன்மையாக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாம் ஆர் எண் 1 என்ற அளவில் உள்ளோம். சில மாநிலங்களில் அது, 1ஐ விட அதிகமாக உள்ளது. அதிகரித்து வரும் போக்கு கவலைக்குரியது என்பதால், எச்சரிக்கை தேவை. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆர் எண் 1.3, பஞ்சாப்பிலும் இது 1.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடு தேவை
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி கே பால், இதுபற்றி கூறுகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்க இது நேரமில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். விழிப்புடன் இருப்பது, கொரோனா நடத்தை, முகக் கவசம் அணிதல், கூட்டங்களைத் தவிர்ப்பது மற்றும் நெருங்கிய அறைகளில் கூட்டத்தை தவிர்ப்பது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கைகள் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

கேரளா, மகாராஷ்டிரா
கடந்த ஏழு நாட்களில் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா கேஸ்களில் கேரளாவில் மட்டும் 51.51 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக அகர்வால் கூறினார். நாட்டின் மொத்த ஆக்டிவ் கேஸ்களில் கேரளா தற்போது 43.77 சதவிகிதம் பங்களிப்புடன் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மகாராஷ்டிராவில் 18.48 சதவிகிதம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

தேவையற்ற பயணம் கூடாது
கேரளாவைப் பொறுத்தவரை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. "பரவுவதை நாம் அனுமதிக்க கூடாது. தடுப்பை அதிகரிக்க வேண்டும், இடம் விட்டு இடம் பெயர்தல் இருக்க கூடாது என்பதுதான் அரசு கொள்கையாகும். நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகளால் கொண்டு வர வேண்டும், தொற்றுகளை அதிகரித்து கொண்டுவரக் கூடாது என்று பால் கூறினார்.

டெல்டாதான் காரணம்
"இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால், டெல்டா வேரியன்ட் நாட்டையே ஆளுகிறது, உண்மையில் உலகை ஆள்கிறது. எல்லா இடங்களிலும் நீங்கள் டெல்டா பரவுவதைக் காணலாம் மற்றும் அதன் காரணமாக பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவுகிறது" என்று பால் கூறினார். டெல்டா பிளஸ் கொரோனா, ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 34 உட்பட இந்தியாவில் 86 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

ஆசிரியர்கள் தடுப்பூசி போட வேண்டும்
தடுப்பூசிகள் எவ்வாறு பொருளாதார நடவடிக்கைகளில் உதவுகின்றன மற்றும் நம்மை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றன என்பதை நாம் பார்த்து வருகிறோம். தடுப்பூசி கவரேஜ் உயர்ந்து வருவதால், அது தொழிலாளர்களுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இந்த வரிசையில் கார்ப்பரேட்களை ஊக்குவிக்கிறோம். நமது கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன, அதை மனதில் கொண்டு ஆசிரியர்களை தடுப்பூசி செலுத்த ஊக்கப்படுத்த வேண்டும். பல ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கு செலுத்த அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டும், "என்று பால் மேலும் கூறினார்.

தடுப்பூசி விதிமுறைகள்
அனைத்து தடுப்பூசிகளும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இறக்குமதி செய்வதற்கான வெவ்வேறு விதிமுறைகளைக் கொண்டுள்ளன. . ஸ்புட்னிக் தடுப்பூசி வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மற்றும் அது இங்கேயும் தயாரிக்கப்படுகிறது, மாடர்னா இறக்குமதி மட்டுமே செய்யப்பட முடியும். இவ்வாறு பால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications