ஒரே நேரத்தில்.. 60 இடங்களில் அதிரடி ஐடி ரெய்டு.. செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு
சென்னை: செட்டிநாடு குழுமத்தில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கணக்கில் வராத 23 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகிறது செட்டிநாடு குழுமம்.
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
சென்னை, கோவை, காஞ்சிபுரம், அரியலூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றனர். இந்த சோதனை தொடர்ச்சியாக ஒரு செய்திக் குறிப்பை இன்று வெளியிட்டுள்ளனர் ஐடி அதிகாரிகள். அதில், இதுவரை கணக்கில் வராத 23 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கணக்கில் வராத பணம் உள்ளடங்கிய மறைத்து வைக்கப்பட்டுள்ள லாக்கரை கண்டுபிடித்துள்ளோம். இதுவரை 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செட்டிநாடு குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோருக்கு சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.