பாலூட்டி வளத்த கிளி! இவங்க சண்டை ஓயாது.. நம்ம ‘அங்கேயே’ போவோம்! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பக்கா மூவ்!
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக இவ்வளவு நாட்களாக பொருமை காத்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களில் சிலர் தலைமை மீதான அதிருப்தியில் திமுக பக்கம் சாய்ந்து விடலாமா என யோசித்து வருவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் திமுகவில் உள்ள 'முன்னாள் அதிமுக அமைச்சர்' மூலமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருப்பது இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் அதிகார மோதல் காரணமான நிகழ்வுகளால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், குறிப்பாக கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் கடுமையான மன உளைச்சலில் இருக்கின்றனர்.
ஒருபுறம் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் கூறி வருகிறார். ஆனால் கள நிலவரமோ வேறு மாதிரியாக இருக்கிறது.

அதிமுக மோதல்
எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காய்களை நகர்த்தி வரும் நிலையில் அதற்காக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரிடம் கரம் கோர்த்து எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கனவு அவ்வளவு சீக்கிரமாய் பலிப்பதாக தெரியவில்லை.

எம்எல்ஏக்கள் அதிருப்தி
இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருக்கும் பல எம்எல்ஏக்களும் முன்னால் அமைச்சர்களும் தலைமை மீது கடும் அதிருதியில் இருக்கின்றனர். காரணம் பொதுவெளியில் திமுகவுக்கு எதிராக பாஜக பிரதான எதிர்க்கட்சி போல அரசியல் செய்துவரும் நிலையில் அதிமுக தலைவர்களோ அறிக்கைகளோடு நின்று வருகின்றனர். பெயருக்கு அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என நடத்தப்பட்டாலும் உண்மையில் களத்தில் இறங்கி பணியாற்ற முடியாத சூழலில் தான் தவிர்த்து வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் இதுகுறித்து தலைமையிடம் பலமுறை பேசி பார்த்தும் பலன் இல்லாததால் சிலர் பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை.

பாஜக தரப்பு
இதனை பயன்படுத்தி அவர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் பாஜக தரப்பு ஈடுபட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் சித்தாந்த ரீதியாக பாஜக தங்களுக்கு ஒத்து வராது என பல நிர்வாகிகளும் ஒதுங்கிக் கொண்டனர் இந்த தகவல்கள் திமுக மேலிடத்திற்கு கிடைத்துள்ள நிலையில் அவர்களை கட்சியில் வளைத்து போடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மஞ்சளுக்குப் பெயர் போன ஒரு மாவட்டத்தில் இருக்கும் எம்எல்ஏ ஒருவரும் 'மோட்டார்' மண்டலத்தில் இருக்கும் எம்எல்ஏ ஒருவரும் இதற்காக திமுகவுக்கு தூதுவிட்டு இருக்கிறார்கள். தற்போது கொங்கு மண்டலத்திற்கு திமுக தரப்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்
இதற்காக 'அதிமுக முன்னாள் அமைச்சர்' ஆக இருந்து தற்போது திமுகவில் இருக்கும் ஒருவர் மூலமாக முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. இந்த தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. காரணம் தங்களுக்குள் அதிகார மோதல்களால் அதிகம் பயன்பெறுவது திமுக தான் என்பது தெரிந்திருந்தும் இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராடிவருகின்றனர். இந்த நிலையில் தற்போது சொந்த கட்சி எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சிகளுக்கு செல்வது நன்றாக இருக்காது என்று தெரிந்திருந்தாலும் வேறு வழியின்றி தங்கள் சண்டையை தொடர முடிவு செய்து இருக்கின்றனர். விரைவில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் திமுகவில் இணையலாம் என்பது மட்டும் உறுதி என்கின்றனர் கொங்கு மண்டல அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications