எப்போ, எப்படி கூட்டணி வைப்போம்னு யாருக்கும் தெரியாது.. எங்களுக்கே தெரியாது.. தேமுதிக இப்படித்தான்!
நான் எப்போ யார் கூட கூட்டணி வைப்பேன்னு யாருக்கும் தெரியாது.. ஏன்னா எங்களுக்கே அது தெரியாது, தேமுதிகவின் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இப்படித்தான் இத்தனை வருடமாக இருக்கிறது
Recommended Video
சென்னை: நான் எப்போ யார் கூட கூட்டணி வைப்பேன்னு யாருக்கும் தெரியாது.. ஏன்னா எங்களுக்கே தெரியாது, தேமுதிகவின் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இப்படித்தான் இத்தனை வருடமாக நடந்து இருக்கிறது. இந்த வருடமும் தேமுதிக அதே வேலையைத்தான் காட்டியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்து உள்ளது. திமுக பக்கம் போகுமா, இல்லை அதிமுகவுடன் ஐக்கியம் ஆகுமா என்ற பலமான கேள்விகள் உருவாகி உள்ளது.
இதற்கான விடை இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அதே சமயம் தேமுதிகவின் அரசியல் கூட்டணி வரலாற்றை பார்க்கையில் தேமுதிக தேர்தலுக்கு முதல்நாள் வரை கூட பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
வரலாறு என்ன
தேமுதிகவின் தேர்தல் கூட்டணி வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் இது உங்களுக்கே புரியும். 2005ல் மதுரையில் தேமுதிக தொடங்கப்பட்டது.
2006 சட்டமன்ற தேர்தல் - தேமுதிக 234 இடங்களிலும் தனித்து போட்டி
2009 லோக்சபா தேர்தல் - தமிழகத்தில் 39ல் தேமுதிக தனித்து போட்டி
2011 சட்டமன்ற தேர்தல் - தேமுதிக 41 இடங்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டி
2014 லோக்சபா தேர்தல் - தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி கூட்டணி வைத்து போட்டி.
2016 சட்டமன்ற தேர்தல் - மக்கள் நல கூட்டணியில் இடம்பிடித்தது. சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி.
இப்படித்தான்
இதில் முதல் இரண்டு 2006 மற்றும் 2009 தேர்தல்களை விட்டுவிட்டு பார்த்தால் மற்ற மூன்று தேர்தல்களில் தேமுதிக கூட்டணி வைத்துதான் போட்டியிட்டது. ஆனால் இந்த கூட்டணி எல்லாம் கடைசி நொடியில் இறுதி செய்யப்பட்ட கூட்டணி ஆகும். கடைசியாக பேச்சுவார்த்தை இழுத்து இழுத்து கூட்டணியை இறுதி செய்வதைதான் தேமுதிக வழக்கமாக வைத்திருந்துள்ளது.
என்ன செய்தது
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, பல நாள் பேச்சுவார்த்தை நடந்தது. திமுகவை வீழ்த்த உருவான இந்த கூட்டணியை உருவாக்க கிட்டத்தட்ட 40 நாட்கள் மறைமுக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ''ஆசை 60 நாள், அரசியல் 10 நாள்'' என்ற கதையாக, தேர்தல் முடிந்த 10 நாட்களில் இந்த கூட்டணி முறிந்தது வேறு கதை.
2014 தேர்தல்
2014ல் நடந்த லோக்சபா தேர்தலும் அப்படித்தான். முதலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லும் என்று கூறப்பட்டது. இதற்காக பல நாள் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி கூட பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பே இறுதியானது.
மீண்டும் போட்டி
2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெரிய அளவில் பேச்சுவார்த்தைகளை செய்யவில்லை. மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்தது. சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அப்போது திமுகவுடன் தேமுதிக பேசியது, உடன்படிக்கை ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதில் தேமுதிக மிக மோசமான தோல்வியை தழுவியது.
இப்போது மீண்டும்
இப்போது மீண்டும் அதே வேலையை தேமுதிக இந்த தேர்தல் கூட்டணியிலும் தொடங்கி உள்ளது. முதலில் அதிமுகவுடன் பேசிய தேமுதிக இப்போது திமுகவுடன் பேசி வருகிறது. இது இல்லாமல் தனியாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் இன்னும் எந்த விதமான முடிவும் இதில் எட்டப்படவில்லை.
ஆனாலும் மோசம்
2011 சட்டமன்ற தேர்தல் தவிர அனைத்து தேர்தலிலும் தேமுதிகவின் வாக்கு வங்கி மிக மோசமாகவே இருந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை தழுவியது. ஆனாலும் இந்த தேர்தலுக்காக தேமுதிக 8 தொகுதிகள் வரை கேட்டு இருக்கிறது. தேமுதிகவின் இந்த பிடிவாதம்தான் கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறது.