“திறந்து பாத்தா தண்ணியே இல்ல.. ஆத்திரத்தில கொளுத்திட்டேன்”- விஜயகாந்த்தை புலம்பவிட்ட மர்ம நபர் கைது!
சென்னை: தே.மு.தி.க தலைமை அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்ததற்கான காரணத்தை கைதான நபர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகம் முன்பு கோடை காலத்தையொட்டி தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த தண்ணீர் பந்தல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. தீ வைத்து எரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேமுதிக தண்ணீர் பந்தல்
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகம் முன்பு ஆண்டுதோறும் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்படுவது வழக்கம். இந்த வருடம் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த தண்ணீர் பந்தலில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். ஓலையால் வேயப்பட்டு இருந்த பந்தலில் தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்து உடனடியாக வந்த கோயம்பேடு போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு இருந்த தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நல்லதுக்கு காலம் இல்லையோ
இச்சம்பவம் குறித்து, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற தரமற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறிய நிலையில் சாமானிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் தாகத்தை தணித்த தண்ணீர் பந்தலுக்கு தீயவர்கள் தீ வைத்த சம்பவம் 'நல்லதுக்கு காலம் இல்லையோ' என நினைக்க தோன்றுகிறது எனத் தெரிவித்திருந்தார்.

சிசிடிவி காட்சி
தேமுதிக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், போலீசார் கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலக பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் கால் டாக்சியில் வந்த வாலிபர் ஒருவர் தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தண்ணியே இல்ல
தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தவர் வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராமு. அவர் மதுபோதையில் தாகம் ஏற்பட்டு இந்த தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். அப்போதில் அங்கு தண்ணீர் இல்லாததால் ஆத்திரமடைந்த ராமு பந்தலுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications