மீண்டும் மீண்டும் திருக்குறள்- ஜியு போப், ஆன்மீக நூல் சர்ச்சையை எழுப்பும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இடைவிடாமல் திருக்குறள், ஜியு போப் மொழிபெயர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்து வருவது சலசலப்புகளை கிளப்பிவிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாட்டை தொடங்கி வைத்தார். அம்மாநாட்டில் திருக்குறள் குறித்து விரிவாக பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், திருக்குறளை தினமும் படித்து அதன்வழி நடக்க வேண்டும்; திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் உள்ளன. அதனை அரசியல் காரணங்களுக்காக சுருக்கக் கூடாது என்றார்.

ஆளுநரின் டெல்லி பேச்சு
பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் தமிழ் கல்விக் கழகம் நடத்தும் லோதி சாலை பள்ளியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது தமிழ்நாடு ஆளுநராக நான் வெளியே போகும்போதெல்லாம் எனக்கு திருக்குறள் புத்தகங்கள், அதன் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வழங்கப்படும். அதில் பெரும்பாலானவை ஜி.யு. போப் உடையது. அதை படித்தபோது, ஆதிபகவன் என்ற வார்த்தையை ப்ரைமல் டெய்ட்டி என்று ஜி.யு.போப் மொழிபெயர்த்திருப்பார். ப்ரைமல் டெய்ட்டி என்பது பழைய சமூகங்களின் சமயத்தைக் குறிக்கும். சிலவற்றை பார்த்து அந்த சமூகத்தினர் பயப்படும்போது அதை போக்க அவர்கள் தெய்வத்தை உருவாக்கினர். அதனால் அந்த வார்த்தையை பயன்படுத்தி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால், ஆதிபகவன் என்பது பழம் சமூகத்தால் கருதப்பட்ட வெறும் முதன்மை தெய்வம் மட்டும் கிடையாது. அதை விட சக்தி வாய்ந்தவர் ஆதிபகவன். அவர்தான் உலகை படைத்தார். ஆனால், ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பை எப்படி பிறகு வந்தவர்கள் வழிமொழிந்து சென்றனர் என்று நினைத்து ஆச்சரியப்படுகிறேன். ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மீகமற்றதாக ஆக்கியிருக்கிறார். தனது மொழிபெயர்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மீக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார் என கூறியிருந்தார்.

வெளுத்தெடுத்த பழ.நெடுமாறன்
அப்போதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டிருந்த அறிக்கையில், சங்க நூல்களிலும், அதையொட்டி எழுந்த திருக்குறளிலும் சமயம் என்ற சொல்லாட்சியோ, மோட்சம் என்ற ஆன்மிகத் தத்துவத்தைக் குறிக்கும் எத்தகைய சொல்லோ அறவே இடம்பெறவில்லை. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளைப் பற்றியே திருக்குறள் கூறுகிறது. மோட்சத்தைக் குறிக்கும் வீடு என்ற தத்துவம் திருக்குறள் எழுந்த காலத்தில் அறவே தோன்றப் பெறவில்லை. சமயம் என்னும் சொல்லாட்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை காப்பியத்தில்தான் முதன்முதல் இடம்பெறுகிறது. அதற்கு முன்னால் தோன்றிய பழந்தமிழ் நூல்கள் எதிலும் சமயம் என்ற சொல்லாட்சி இடம்பெறவே இல்லை. ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியார் எனவே, அவர் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்த்துள்ளார் என்றும் ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே ஜி.யு. போப் அவர்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என்ற உண்மையையும் ஆளுநர் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதிக அடையாளத்தைச் சூட்டுவதற்கே அவர் முயற்சி செய்துள்ளார் என சாடியிருந்தார்.

வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
அதே போல், சு.வெங்கடேசன் எம்.பி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும் 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜியு போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள் எனவும் விமர்சித்திருந்தார்.

இன்றும் சர்ச்சை பேச்சு
இந்த நிலையில் இன்று மீண்டும் ஜியு போப் மொழிபெயர்ப்பு, திருக்குறள் ஆன்மீக நூல் என சர்ச்சையை விடாமல் எழுப்பிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிதிருக்குறள் ஆன்மீகத்தைக் கற்பிக்கிறது. திருக்குறள் ஆகச்சிறந்த படைப்பு. ஆன்மீகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். அது நமது பாரத நாட்டின் பெருமை கொண்ட ஒன்று. ஒரு மனிதன் எப்படி இருக்க இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு நூல் தான் திருக்குறள். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை ஜி.யு.போப் தவறாக மாற்றி மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என பேசியிருக்கிறார். ஆளுநரின் இந்தப் பேச்சும் மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications