தேசிய அளவில் வெடித்த விவகாரம்! இண்டிகோ விமான எமர்ஜென்சி கதவை திறந்தது யார்? விசாரணைக்கு உத்தரவு
சென்னை: சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் சிலர் திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்துள்ளது. இந்த விமானம் 10.05 மணிக்கு புறப்பட வேண்டியது. ஆனால் 142 நிமிடங்கள் தாமதமாக அதன்பின் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இருவர், தென்னிந்தியாவை சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள், விமானம் எடுக்கும் முன் இதன் கதவுகளை திறந்ததாக கூறப்பட்டது. திமுக நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக இரண்டு தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மீது புகார்களை வைத்தனர்.
கதவு
விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு இடையே முன் வரிசையில் எமர்ஜென்சி கதவு இருக்கும். பணிப்பெண்கள் விமானத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கும் போது இதை திறப்பது பற்றியும் விளக்குவார்கள். அந்த வகையில் பணிப்பெண் விளக்கியதும் அந்த இரண்டு பேரும் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடி உள்ளனர். இதையடுத்து ரன் வேயில் டேக் ஆப் செய்வதற்கு முன் மெதுவாக டேக்சிங் செய்து கொண்டு இருந்த அந்த விமானம் உடனே நிறுத்தப்பட்டது.
விமானம்
இதையடுத்து விதிப்படி விமானத்தில் இருந்த பயணிகள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. விமானத்தில் உள்ளே எல்லா சோதனைகளும் செய்யப்பட்டன. அதன்பின் விமானத்தின் பிரஷர் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை எல்லாம் முடிந்து 142 நிமிடம் தாமதமாக விமானம் எடுக்கப்பட்டது. அந்த இரண்டு பேரிடமும் இதற்காக மன்னிப்பு கடிதம் வாங்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அதோடு அவர்கள் இருவருக்கும் வேறு இருக்கையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
என்ன நடந்தது?
இந்த நிகழ்வில் ஈடுபட்ட அந்த இரண்டு பேர் யார் என்ற விவகாரத்தை இண்டிகோ நிறுவனம் வெளியிடவில்லை. இது தொடர்பாக The South First ஊடகத்திடம் பேசிய அந்த விமானத்தில் பயணித்த சென்னை பயணி ஒருவர், விமானம் ஏற்கனவே 40 நிமிடம் தாமதமாக சென்றது. அந்த விமானம் சிறிய விமானம். 70 பயணிகள் இருந்தனர். அதில் உள்ளே எமர்ஜென்சி கதவுக்கு அருகில் இருந்த அவர்கள் கதவை திறந்துவிட்டனர். அதில் இருக்கும் லிவரை பிடித்து இழுத்துவிட்டனர். அப்போது விமானம் ஓடுபாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது, என்று தெரிவித்துள்ளார்.
இண்டிகோ நிறுவனம்
இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் The South First ஊடகத்திடம் அளித்த விளக்கத்தில், அன்று நடந்தது ஒரு தவறு. யாரோ ஒருவர் அவசரகால எமர்ஜென்சி அவை திறந்துவிட்டார்கள், உடனடியாக குழுவினர் தலையிட்டனர். அதன்பின் உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்பட்டது. விதிமுறைகளின்படி விமானம் முழுமையான ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்னரே விமானம் புறப்படுவதற்கு தயார் செய்யப்பட்டது. அந்த பயணிகள் இதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டனர். அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது, என்று தெரிவித்துள்ளது.
புகார் விசாரணை
இந்த நிலையில்தான் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முடியும். இது தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்பிக்கும்படியும் விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது என்று ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பயணி யார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பான விவரங்கள் இதில் வெளியிடப்படவில்லை.