ஏ.ஒய். 4.2 கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் இல்லை - அமைச்சர் மா. சுப்ரமணியன்
தமிழ்நாட்டில் புதிய வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஏ.ஒய். 4.2 கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கர்நாடகாவில் 7 பேர் புதிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து நீடித்துக் கொண்டேவருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அமெரிக்காவிலும் கடந்த ஒருவார காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி 71,000 ஆக இருந்துவருகிறது.

புதிய வகை கொரோனா
சீனாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு கொரோனா டெல்டாவின் புதிய திரிபான ஏ.ஒய் 4.2 வைரஸ்தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் மூன்றாவது அலை குறித்தான அச்சம் தொடர்ந்து நீடித்துவருகிறது. நூறு கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தினாலும் புதிய வகை கொரோனா பரவி வருகிறது.

கர்நாடகாவில் கவனம்
புதிய வகை கொரோனாவான ஏ.ஒய் 4.2 குறித்து தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஏ.ஒய். 4.2 கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார். கர்நாடாக மாநிலத்தில், ஏழு பேருக்கு கொரோனா ஏ.ஒய். 4.2 வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஏ.ஒய் 4.2 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கர்நாடகாவில் 7 பேர் புதிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7ஆம் கட்ட தடுப்பூசி முகாம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏ.ஒய். 4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு சதவீதம் அளவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் புதிய வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். தமிழகத்தில் 7ஆம் கட்ட தடுப்பூசி முகாம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடத்தப்படும். மேலும், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள்தான் இரண்டாம் கட்ட கோவேக்ஸின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications