மின்வேலியில் இருந்து விவசாயிகள் விடுதலை! – வியக்க வைத்த வில்லேஜ் விஞ்ஞானி
சென்னை: படித்தால்தான் விஞ்ஞானியா? அப்படி இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் நெல்லையைச் சேர்ந்த 'வில்லேஜ் விஞ்ஞானி' தமிழழகன். இவரது கண்டுபிடிப்பு வனவிலங்குகளுடன் போராடி வரும் விவசாயிகளுக்கு விடுதலையைப் பெற்றுத் தர உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பக்கம் உள்ள மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வனம் சார்ந்த களப்பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
32 வயதான தமிழழகன் வனம் மற்றும் வனத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களின் நடுவே வாழ்ந்து வருகிறார். ஆகவே வனவிலங்குகளிடம் இருந்து தங்களின் பயிர் வகைகளைக் காப்பாற்ற அன்றாடம் விவசாயிகள் போராடுவதற்கு ஏதேனும் தீர்வை உண்டாக்க முயன்று வந்தார்.
சபாஷ்.. வீதிக்கு வீதி நூலகம்.. கோவை காவல்துறை ஆணையரின் அதிரடி ஆக்ஷன்!
அதன்தொடர்ச்சியாக இப்போது வனவிலங்குகளைச் செயற்கையாக அச்சுறுத்தி பயிர்களைக் காப்பாற்றும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அது குறித்து நாம் தமிழழகனிடம் பேசினோம்.
"குடும்ப வறுமைக் காரணமாக தொடர்ந்து படிக்க முடியல. பத்தாம் வகுப்பு வரைக்குத்தான் படிச்சேன். எங்க வீடு மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டித்தான் உள்ளது. இங்குதான் தாத்தா பாட்டி காலத்துல இருந்தே விவசாயம் பார்த்து வருகிறோம்.
இந்த ஊர்ல உள்ள 'அகத்தியர் மலை சமுதாய பாதுகாப்பு சங்கத்தில் வேலை பார்த்து வருகிறேன். காட்டில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றி ஆய்வு செய்வதுதான் வேலை" எனக் குறிப்பிடும் தமிழழகனுக்கு சிறுவயதிலிருந்தே ரேடியோவை சரி செய்வது, மோட்டார் பொருட்கள் பழுதை நீக்குவது போன்றவற்றில் ஆர்வமாக இருந்து வந்துள்ளார். அதற்கு அவரது அப்பா சில நுட்பங்களைக் கற்றுத் தந்துள்ளார்.
"எங்க பகுதி முழுக்கவே வனம் சார்ந்த பகுதி. இங்க அடிக்கடி காட்டு விலங்குகள் வயல் காட்டில் புகுந்து பயிர்களைச் சேதமாக்கிவிடும். அதைத் தடுக்க மின்வேலிகளை விவசாயிகள் போட்டுள்ளனர்.
அதில் என்ன பிரச்சினை என்றால், தவறுதலாக அதில் மனிதர்களே மாட்டிக் கொண்டு உயிரிழந்துவிடுகின்றனர். வெளியூரிலிருந்து புதியதாக வருபவர்கள் தெரியாமல் அடி அடிப்பட்டு உயிர்ப்பலியாகும் சூழல் நிலவுகிறது. அதைத் தடுக்கத்தான் இந்தக் கருவியைக் கண்டுபிடித்தேன்" என்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.
"இந்தக் கருவியைச் செய்ய மூன்று வாரம் ஆனது. ஒவ்வொரு முறை வைக்கும்போது வேறுசில பிரச்சினைகள் கள ரீதியாக வந்ததைக் கண்டுபிடித்து அதைத் தொடர்ந்து சரி செய்தேன். இறுதி வடிவத்தை எட்ட மூன்று வாரங்கள் பிடித்தன.
அப்பா ரிக்ஷா தொழிலாளி.. மகன் ஐடி கம்பெனி சிஇஓ.. யார் இந்த பிரகாஷ் பழனி!
இந்தக் கருவியை நமது விவசாய நிலத்தில் சோளக்கொல்லை பொம்மையைப் போல நட்டுவிட்டால், அதில் உள்ள சென்சார் கருவி விலங்குகள் நடமாட்டத்தின் போது விநோதமாக ஒலி எழுப்பும். தொடர்ந்து ஒரே மாதிரியான ஒலியை எழுப்பினால் விலங்குக்குப் பழகிவிடும்.
ஆகவே இடைவெளிவிட்டு விட்டு வேறுவேறு ஒலியை இந்தக் கருவி எழுப்பும். விதவிதமாக நாய் போல் குரைப்பது மற்றும் வேறுவேறு விதமான சத்தங்களை உண்டாக்குவதால் வனவிலங்குகள் அச்சப்பட்டு விலகிவிடும். பயிர்கள் காக்கப்படும். இந்தக் கருவி சூரிய ஒளி மூலம் இயங்கக் கூடியது" என்கிறார்.
"இதைக் கண்டுபிடிக்க எனக்கு மட்டும்தான் 3 வாரங்கள் ஆனது. அதன் பிறகு இதில் புரோகிராம் செய்ய ஒரு இளைஞர் உதவினார். அவருக்குத்தான் கூடுதல் நேரம் தேவைப்பட்டது" எனச் சொல்லும் தமிழழகன் இதனை வியாபார நோக்கத்தில் செய்யவில்லை என்றும் விவசாயிகளின் நலன் வேண்டிய செய்ததாக சொல்கிறார்.
விற்பனை நோக்கம் இல்லாமல் சமூக நோக்கத்திற்காகக் களம் இறங்கியுள்ள இவரைச் சுற்றுவட்டார விவசாயிகள் வீடு தேடி வந்து வாழ்த்திவிட்டுச் செல்கின்றனர்.