வரதராஜன் மாஸ்க் போட்டுகிட்டு வரத் தயாரா.. தமிழகத்தில் போதிய படுக்கை வசதி உள்ளது: விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னை உட்பட தமிழகம் முழுக்க போதிய அளவு மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை மருத்துவமனைகளில் ஒரு படுக்கை கூட காலியாக இல்லை என்று செய்தி வாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன் வீடியோ வெளியிட்ட நிலையில் இன்று மதியம் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஒரு பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.
சென்னை மருத்துவமனைகளில் பெட் காலி இல்லை என்ற நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை.. விஜயபாஸ்கர் அதிரடி
வரதராஜன் வீடியோவுக்கு கண்டனம்
வரதராஜன் வெளியிட்ட தகவல் மிகப்பெரிய தவறு. மக்கள் பீதியில் இருக்கக்கூடிய ஒரு தொற்றுநோய் காலகட்டத்தில், எங்குமே படுக்கை வசதி இல்லை என்று சொல்வது மிக தவறானது. இது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து, தேவையான படுக்கை வசதிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தி வருகிறது. நோயாளிகளை ஐசியூவில் வைப்பதா அல்லது வீட்டுக்கு அனுப்புவதா என்பதெல்லாம் நோயாளியின் உடல்நிலையை பார்த்து மருத்துவர்கள் எடுக்கக்கூடிய முடிவாகும்.
நிருபர்கள் சொல்லுங்கள்
வரதராஜன், அரசு செயலாளர்கள், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும், படுக்கை வசதி கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். யாரை தொடர்பு கொண்டார் என்று தெரிவிக்க முடியுமா? நிருபர்களில், யாராவது ஒருவர், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க பெட் வசதி இல்லாமல் இருப்பதாக, கூறமுடியுமா? சொல்லுங்கள். இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பான சிகிச்சை
தமிழகத்தில் 56 சதவீதம் நோயாளிகள் குணம் அடைந்து வருகிறார்கள். எந்த மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியாத ஒரு வைரசுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனை வருபவர்களுக்கு கூட டாக்டர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளனர். அது பற்றிய எந்த செய்தியும் வைரலாக சுற்றுவது கிடையாது.
படுக்கை காலியாக உள்ளது
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 20 படுக்கை வசதியுடன் ஆரம்பித்தோம். ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கை வசதியை ஆரம்பித்தோம். ஸ்டான்லி மருத்துவமனையில் 20 படுக்கை வசதியோடு ஆரம்பித்தோம். 1400 படுக்கை வசதிகளுடன் மாநகராட்சி சார்பில் கே வி குப்பம் பகுதியில் மருத்துவ மையம் தயாராக உள்ளது அங்கு இடவசதி காலியாகத்தான் இருக்கிறது. நோயாளி உடல் நிலையை பொறுத்துதான் எங்கே சேர்க்க வேண்டும் என்று, மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 5 பேர் மட்டும்தான் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் கூறுவதற்காக, பிற நோயாளிகளையும், வெண்டிலேட்டர் சிகிச்சையில் வைக்க முடியாது.
வரதராஜன் வரத் தயாரா
வரதராஜன் மாஸ்க் அணிந்தபடி என்னுடன் வரட்டும்.. ஒவ்வொரு மருத்துவமனையாக நான் அழைத்துச் செல்கிறேன். டாக்டர்களும் தூய்மைப் பணியாளர்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் நேரில் காண்பிக்க தயாராக இருக்கிறேன். களத்தில் நின்று பணியாற்றக்கூடியவர்களைத் துன்புறுத்தாதீர்கள். படுக்கை வசதி இருக்கக் கூடிய சூழ்நிலையில், படுக்கை வசதி இல்லை என்று கூறுவதில் என்ன சந்தோஷம்? தமிழகத்தில் படுக்கை வசதி பிரச்சினை கிடையாது. இன்னும் கொரோனா நோய் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.