சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க முடியாது - அதிமுக, பாஜக வெளிநடப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக, எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை: தமிழக சட்டசபையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மாநில அரசாங்கம் உள்நோக்கத்தோடு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அவையின் தொடக்கத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

வேளாண் சட்டங்கள் குறித்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை. வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.
மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மூன்று சட்டங்களும் உள்ளன. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்ற எழுச்சிமிகுப் போராட்டம் நடந்தது இல்லை. ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தாவக (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் நால்வர் முதலில் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வேளாண் பெருமக்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியது. அவர்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்றார்.
மாநில அரசாங்கம் உள்நோக்கத்தோடு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து அதிமுக எம்எல்ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென்றும் விவசாயிகளின் வேலையை உறுதி செய்யும் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் அந்த தீர்மானத்தில் வலியறுத்தப்பட்டது. ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications