'அந்த' ஒரு பயணம்,அப்படியே அடியோடு மாறிய ஓபிஎஸ்.. சசிகலாவை ஓப்பனாக எதிர்க்க தொடங்கியது ஏன்?பரபர தகவல்
சென்னை: சசிகலா கட்சியைக் கைப்பற்றக் காய்களை நகர்த்தத் தொடங்கிய பிறகும்கூட, இத்தனை காலமாக அமைதி காத்து வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று திடீரென சசிகலாவுக்கு எதிராகக் காட்டமான கருத்துகளைக் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாடு அரசியல் களத்தில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமலேயே இருந்தது.
புதிய அரசு அமைந்துள்ளதாலும் அப்போது கொரோனா உச்சத்திலிருந்ததாலும் தார்மீக அடிப்படையில் சில காலம் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்காமல் இருந்தது அதிமுக.

போராட்டம்
இப்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதிமுக தனது விமர்சன கணைகளைத் தொடங்கிவிட்டன. திமுக தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாகக் குற்றஞ்சாட்டி அதிமுக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையைப் பின்பற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

ஓபிஎஸ் பேச்சு
தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் திமுகவை விமர்சித்துப் பேசியதைக் காட்டிலும் மறைமுகமாக சசிகலாவையே அதிகம் சாடியிருந்தார். சசிகலா பெயரை அவர் நேரடியாக உச்சரிக்கவில்லை என்றாலும்கூட அவர் யாரை விமர்சிக்கிறார் என்பது தெளிவாகவே தெரிந்தது.

சசிகலா விமர்சனம்
அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது தனிப்பட்ட நபரோ குடும்பமோ கட்சியை வழிநடத்த முடியாது என்று கூறிய ஓபிஎஸ், தனி நபரோ, ஒரு குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை அதிமுகவில் உள்ளது என்றும் ஜனநாயக முறைப்படி கட்சி நடக்கிறது என்றும் குறிப்பிட்டார். மேலும், என்ன முயற்சி எடுத்தாலும், யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்றும் நான்கரை ஆண்டுகளாக இருவரும் அதிமுகவை வழி நடத்தி வருகிறோம் என்றும் கூறினார். தமிழக அரசியலில் ஓபிஎஸ்-இன் பேச்சு முக்கியமானதாக உருவெடுத்துள்ளது.

ஓபிஎஸ் vs ஈபிஎஸ்
தர்மயுத்தம் சமயத்தில் சசிகலாவை எதிர்த்தே ஓபிஎஸ் அரசியல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். சசிகலா சிறை செல்ல, இபிஎஸ் முதல்வராக, ஓபிஎஸ் துணை முதல்வரானார். ஆட்சி ஈபிஎஸ்-இன் கையிலும், கட்சி ஓபிஎஸ் கட்டுப்பாட்டிலும் இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும்கூட பல்வேறு சமயங்களிலும் நான் தான் நம்பர் 1 என்பதை எடப்பாடி பழனிசாமி காட்டி வந்தார்.

அமைதி காத்த ஓபிஎஸ்
சட்டசபைத் தேர்தல் சமயத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் இருந்தது. முதல்வர் யார் என்பதைத் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் எனப் பலரும் கூறியபோதும், விடாப்பிடியாக இருந்து தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி. சரி தேர்தலுக்குப் பிறகு கட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து பார்த்துக்கொள்ளலாம் என அமைதி காத்தார் ஓபிஎஸ்.

தேர்தல் முடிவுகள்
தேர்தல் சமயத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் மட்டுமே பிரசாரம் செய்தனர். ஓபிஎஸ்கூட கடைசிக் கட்டத்தில் தான் மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்தார். ஈபிஎஸ் மட்டுமே வெற்றி நடை போடும் தமிழகம் என்ற முழக்கத்தை முன் வைத்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். தேர்தல் முடிவுகளிலும் கொங்கு மண்டலத்தில் தான் அதிமுக பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. குறிப்பாகக் கோவையில் திமுக வெயிட்வாஷ் ஆகி இருந்தது. போடிநாயக்கனூர் தொகுதியிலேயே ஓபிஎஸ் வெற்றி உறுதியாகப் பல மணி நேரம் ஆனது அனைவரும் தெரியும்.

ஆடியோ அரசியல்
தேர்தலுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கமே கட்சியில் தொடர்ந்தது. எத்தனை குழப்பம் இருந்தாலும் தன்னை எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்க வைத்தார். நிலைமை தனக்குச் சாதகமாக இல்லை என்பதால் இருந்ததால் ஓபிஎஸ்-ம் அமைதியாகவே இருந்தார். அந்த சமயத்தில் தான் சசிகலா தனது ஆடியோ அரசியலைத் தொடங்கினார். இதற்கு ஈபிஎஸ் கடுமையாக எதிர்வினையாற்றி போதும், ஓபிஎஸ் தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.

சசிகலா
அதற்கேற்றவாறு சசிகலாவும் சில ஆடியோக்களில் இருவரையும் அரவணைத்துச் செல்லவே விருப்பம் என்றும் தர்மயுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் ஓபிஎஸை தான் முதல்வராக அறிவித்திருப்பேன் என்று பேசியது பெரும் சர்ச்சையானது. அதேபோல சசிகலாவுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக தலைமை உத்தரவிட்டது.

ஓபிஎஸ் அரசியல்
அப்போது மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், தேனி மாவட்ட அதிமுக அமைதி காத்தே வந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியை தனிமைப்படுத்த சசிகலாவுடன் ஓபிஎஸ் கரம் கோர்க்கவுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இத்தனை காலம் எல்லாவற்றிலும் அமைதியை மட்டுமே பதிலாகத் தந்த ஓபிஎஸ், டெல்லி விசிட்டிற்கு பிறகு அடியோடு மாறிவிட்டார்.

டெல்லி விசிட்
கடந்த சில நாட்களுக்கு முன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று அவர்கள் கூறினாலும், சசிகலா வருகை குறித்தும் அவரை அதிமுகவில் இணைப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அடியோடு மாறிய ஓபிஎஸ்
இந்தச் சூழலில் டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு சசிகலாவுக்கு எதிராக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் ஓ பன்னீர்செல்வம். அரசியல் களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. இதனை சசிகலா எப்படி கொள்ளப்போகிறார், அதிமுகவை தன் காட்டுப்பாட்டில் கொண்டு வர என்ன செய்யப்போகிறார் என்பது போன்ற கேள்விகளுக்குக் காலம் ஒவ்வொரு பதிலாகச் சொல்லும்..!












Click it and Unblock the Notifications