மாத்திரை சாப்பிடறேன்.. மயக்கமா இருக்கு.. அழுது அழுது ஓட்டு கேட்டாரே விஜயபாஸ்கர்.. "மலையை" வெல்வாரா?
அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலையில் வெற்றி பெறுவாரா?
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் விராலிமலையை வெல்வாரா? அல்லது திமுக பக்கம் புதுக்கோட்டை சாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த முறையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சீட் கிடைத்துள்ளது.. ஜெயலலிதாவின் நன்மதிப்பை நேரடியாக பெற்றவர் விஜயபாஸ்கர்.. கொரோனா காலத்தில் இவரது செயல்பாடுகளை கண்டு தமிழக மக்கள் மனசார பாராட்டவும் செய்தனர்.
ஒருகட்டத்தில் முதல்வரையே மிஞ்சும் அளவுக்கு ஃபேமஸ் ஆனார். அதேசமயம், சீனியர்களை இவர் மதிப்பதில்லை என்ற ஒரு புகாரும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது தொகுதியில் இவரது பிரச்சார பேச்சு வியப்பை தந்து வருகிறது.. காரணம் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல், வேறு பாணியை விஜயபாஸ்கர் கையில் எடுத்ததுதான்.
உழைப்பு
இவர் பேசும்போது, "இந்த விஜயபாஸ்கருக்கு இந்த எம்எல்ஏ பதவியை நீங்கதான் தந்தீங்க.. மறுபடியும் நீங்க நினைச்சாதான் இந்த பதவியை வாங்கி தர முடியும்... உங்க முன்னாடி நடிக்க முடியாது.. உங்க கண்ணுல தண்ணீர் வரக்கூடாதுன்னு தான் இந்த விஜயபாஸ்கர் ஓடி ஓடி உழைக்கிறான்.. எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா என்ன? ஆயிரம் கஷ்டம் இருக்கு...
மயக்கம் வருது
நானே உங்ககிட்ட வந்து அழுது புலம்புனா நல்லாவா இருக்கும். இந்த கொரோனா டைமில் என் உடல் எடை 7.5 கிலோ குறைந்து போயிடுச்சு.. எனக்கும் சுகர் இருக்கு.. பி.பி. இருக்கு.. மாத்திரை சாப்பிடறேன்... தலை சுற்றல் வருது.. மயக்கம் வருது. இருந்தாலும் என் மனசில் வெறி இருக்கு.. எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒழுங்காக செய்யணும்னு எண்ணம் இருக்கு" என்றார்.
புலம்பல்கள்
இவ்வளவு கதறி அழுதும், புலம்பியும் வாக்கு சேகரித்து வரும் விஜயபாஸ்கரை மக்கள் வெற்றி பெற வைப்பார்களா? உண்மையில் தொகுதியில் என்னதான் பிரச்சனை நிலவுகிறது? ஏன் இப்படி அமைச்சரே புலம்புகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
பழனியப்பன்
முதல் விஷயம், விஜயபாஸ்கருக்கு எதிராக களமிறங்குவது பழனியப்பன்.. இவர் திமுகவின் சீனியர் நபர்.. கடந்த முறை விஜயபாஸ்கருக்கு டஃப் தந்தவர் இவர்தான்.. 2 பேருமே ஒரே சமுதாயம்.. அதனால்தான் வாக்கு வித்தியாசம் பெரிதாக இவர்களுக்கு எப்போதும் இருப்பதில்லை.. அதனாலேயே இந்த முறையும் பழனியப்பனை இறக்கி விட்டுள்ளது திமுக.. இது விஜயபாஸ்கருக்கு கொஞ்சம் மைனஸ்தான்.
மக்களிடம் நெருக்கம்
அதேபோல, விஜயபாஸ்கர் எப்படி தொகுதி மக்களிடம் நெருங்கி இருக்கிறாரோ, பழனியப்பனும் அதேகேரக்டர்தானாம்.. விஜயபாஸ்கர் கொரோனா சமயத்தில் எப்படி எல்லாம் தொகுதி மக்களை காத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.. கொரோனா சமயத்தில் மட்டுமே விஜயபாஸ்கர் நெருங்கி இருக்கும்போது, பழனியப்பன் மட்டும் ஆல் டைம் நண்பராக மக்களிடம் பழகி வந்துள்ளார்.. யார் வீடாக இருந்தாலும் சரி, டக்கென உள்ளே நுழைந்து யதார்த்தமாக பேசுவாராம்.. மக்களின் நல்லது கெட்டதுகளில் முதல் ஆளாக நிற்பாராம்.. இதுவும் விஜயபாஸ்கருக்கு சற்று மைனஸாக உள்ளது.
முத்தரையர் வாக்கு
இது எல்லாவற்றையும்விட, விஜயபாஸ்கருக்கு வழக்கமாகக் கிடைக்கும் முத்தரையர் வாக்குகளில் இந்த முறையும் சரிவு ஏற்படும் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, அமமுகவும் தன் தரப்பு வேட்பாளரை இறக்கிவிட்டு, அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்க காத்து கொண்டிருக்கிறது. அதனால்தான் விஜயபாஸ்கர் அழுது புலம்பி வாக்கு சேகரித்து ஆரம்ம்பித்துவிட்டாரோ என்னவே தெரியவில்லை..
இணைப்பு திட்டம்
ஆனால், அதேசமயம் இவர் தொகுதிக்கு செய்த நல்லவைகளையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. புதுக்கோட்டை என்றாலே தண்ணீர் தட்டுப்பாடு இருந்திருக்கிறது.. இதற்கு ஒரு முடிவு கட்டியது விஜயபாஸ்கர்தான்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வைத்து காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.. எல்லா வகையான அரசுத்துறை அலுவலகங்களையும் தன்னுடைய தொகுதிக்குள் கொண்டுவந்திருக்கிறார்.. இருந்தாலும் அந்த ஊழல் குற்றச்சாட்டை எப்படி பார்த்தாலும் மறக்க முடியவில்லை..