அவங்க சம்பாதிச்சுட்டாங்கப்பா.. பிரபு பாவம் இல்லையா.. 3 பேருக்கு ஆதரவாக வலுக்கும் குரல்!
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் இந்த 3 பேர் மீதான அனுதாப அலை பலமாக வீச ஆரம்பித்துள்ளதாம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இதை எதிர்பார்க்கவில்லை என்பதால் தற்போது குழப்பம் குடி கொள்ள ஆரம்பித்துள்ளதாம்.
தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார் சட்டமன்ற அதிமுக கொறடா ராஜேந்திரன்.
இந்நிலையில் இது தொடர்பாக ஊடகங்களில் விளக்கம் அளித்த விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், "அரசுக்கு ஆதரவாக தான் தாம் உள்ளதாகவும், அரசுக்கு எதிராக செயல்படவில்லை எனவும்"கூறியிருக்கிறார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு கூறுகையில், சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் தர தயாராக உள்ளதாகவும், கொறடா உத்தரவை தாம் மீறியதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
3 பேருக்கும் அச்சம்
இது தொடர்பாக மேலும் நாம் விசாரித்தபோது, 3 எம்.எல்.ஏக்களுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். சபாநாயகர் பதவியை பறித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் தான் அரசுக்கு ஆதரவு என ஊடகங்களில் அந்தர்பல்டி பேட்டி அளித்தார்களாம் அந்த மூவரும்.
ஆபத்து வேண்டாமே
ஏற்கனவே 18 தொகுதி இடைத்தேர்தலில் தினகரனை நம்பி போட்டியிட்டவர்களில் எத்தனை பேர் கரைசேருவார்கள் எனத் தெரியாத நிலையில், 3 எம்.எல்.ஏக்களும் அந்த ஆபத்தான விளையாட்டில் சிக்க விரும்பவில்லையாம்.
ஏழை பிரபு
அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோரை பொறுத்தவரை பணத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் கள்ளக்குறிச்சி பிரபு ஏழ்மையான பின்புலத்தை கொண்டவராம். அதனால் அவசரப்பட்டு அரசை பகைத்து கொள்ள விரும்பவில்லையாம். ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பார் என மூவரும் எதிர்பார்க்கவில்லையாம்.
உதட்டில் சிரிப்பு
உள்ளத்தில் கோபம் இருந்தாலும் உதட்டில் சிரித்தாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அவர்கள் மூவரும். இதற்கிடையே, இவர்களை நீக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது பாவம் என்று அதிமுகவினர் மத்தியில் குரல் எழுந்துள்ளதாம்.
இதைத் தவிர வேறு வழியில்லை
ஏனென்றால் தேர்தலில் போடியிட்டு வெற்றிபெற பட்ட கஷ்டத்தை முதல்வர் தரப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூறினார்களாம். என்னதான் இருந்தாலும் நம்ம கட்சி எம்.எல்.ஏ.க்களை நாமே இப்படி செய்ய வேண்டுமா என்பது அதிமுக எம்.எல்.ஏக்களின் கேள்வி எனக் கூறப்படுகிறது. ஆனால் அதேசமயம், இதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று எடப்பாடி தரப்பில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விளக்கப்பட்டு வருகிறதாம்.