எடப்பாடியுடன் மீட்.. நேரா வண்டியை ஓபிஎஸ் வீட்டுக்கு விட்ட செங்கோட்டையன்.. சமாதான பேச்சுவார்த்தை?
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் பேசிவிட்டு ஓ.பி.எஸ்ஸை சந்திக்கச் சென்றதால் சமாதான பேச்சுவார்த்தையாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் மாறி மாறி தனித்தனியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

அதிமுக பிரச்சனை
அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த 14ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, ஒற்றைத் தலைமை தொடர்பாக விவாதம் எழுந்தது. இந்தப் பிரச்சனை பின்னர் பெரும் பூகம்பமாக வெடித்தது.

ஆலோசனை
இதைத்தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவருமே தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து சிலரும் வந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனாலும், இரு தரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்படாததால் சிக்கல் நீடிக்கிறது.

இன்றும் கூட்டம்
இந்நிலையில், இன்று மீண்டும் அதிமுக அலுவலகத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்து முக்கிய நிர்வாகிகள் வந்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தின்போது அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர். ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவர் ஒரு பிரிவினரால் தாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடியுடன் சந்திப்பு
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இதில் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஓ.பி.எஸ் உடன் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்ளுமாறு ஓ.பன்னிர்செல்வத்துடன் செங்கோட்டையன் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications