ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! நான் யாருன்னு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சு! இபிஎஸ்-ன் மெகா திட்டம்!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் தொடர்ந்து தனக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்படும் பாஜக தலைமையால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர்செல்வத்தோடு பாஜக தலைமைக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மெகா திட்டம் ஒன்றை தீட்டி இருப்பதாக கூறுகின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.
முதல்வராக பதவியேற்ற போதும் சரி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும் சரி தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் நெருக்கடியை சந்தித்து வருவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வாடிக்கையாக போய்விட்டது.
முதல்வராக பதவியேற்ற உடனேயே ஓ.பன்னீர்செல்வத்தின் நெருக்கடி, அதற்குப் பின்னர் அதிகாரம் மோதல், திமுகவின் எதிர்க்கட்சி அரசியல், பாஜகவின் மறைமுக நெருக்கடி என பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது.

ஓ.பன்னீர்செல்வம்
சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக பிரச்சாரத்திற்கு செல்லாமல் கலந்து கொள்ளாமல் கழன்று கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் பலனாக இரட்டை இலை என்ற பெயருக்காகவும் நான்காண்டுகளில் செய்த சில சாதனைகளுக்காகவும் குறிப்பிடத்தக்க அளவு சீட்டுகளை அதிமுக வென்றது. ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்பதற்கு கூட ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதியை பெற வேண்டி இருந்தது. அப்போதும் பாஜக தலைமையே பஞ்சாயத்து செய்து எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தியதாக ஒரு பேச்சு உண்டு.

எடப்பாடி பழனிசாமி
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த எடப்பாடி அதற்குப் பிறகாக தானே தனி தலைமையாய் இருந்தால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்காது என்பதை உணர்ந்து ஒற்றை தலைமை முழக்கத்தினை ஆதரவாளர்கள் மூலம் பொதுவெளியில் கொண்டு வந்தார். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகின்றார். அது மட்டும் இல்லாமல் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரும் தனித்தனியாக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுகவின் தலைமையை கைப்பற்றி விட்டால் இனி பிரச்சனை இன்றி அரசியல் செய்யலாம் என எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்திருக்கிறார்.

பாஜக தலைமை
இடையில் பாஜக வேறு அதிமுகவையே நம்பி இருக்கும் நிலையில் இருக்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அக்கட்சி சாதகமாக செயல்படுவதையும் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை மீண்டும் அதிமுகவில் இணைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் நீக்கிவிட்டு தானே தனி தலைமையாய் தொடர வேண்டும் என நினைக்கிறார். ஆனால் பாஜக தலைமை இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு சாதகமாக இருக்கிறது.

கடும் கோபம்
காரணம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத் தகுந்த இடங்களை பெற வேண்டுமென்றால் அதிமுகவின் தயவு தேவை. அதிமுக ஒன்றாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என அந்த கட்சி நினைக்கிறது. இதற்காக பல்வேறு துறை வேலைகளிலும் அந்தக் கட்சி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் மூலம் விமர்சிக்க வைத்திருக்கிறார். இதனால் பாஜக தலைமையும் கடும் கோபமடைந்ததாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
நிலைமை இப்படி இருக்க மற்ற கட்சிகளைப் போலவே எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கமும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே இருக்கிறது. அந்த தேர்தலில் தனது தலைமையின் மூலம் தேர்தலை சந்தித்து குறைந்தது 10 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டாலே போதும் தனது தலைமையை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொண்டார்கள் என கூற வைக்க முடியும் மேலும் பாஜக கூட்டணியில் இல்லாவிட்டால் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஏற்கனவே கூறியது போல தனது தலைமையிலான அதிமுக மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது.

பிளவு நிச்சயம்
கடந்த சில நாட்களாக பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் முடிவில் எடப்பாடி இருப்பதாக கூறிய நிலையில் தற்போது அது தொடர்பாக உறுதியான முடிவெடுத்து இருப்பதாகவும் வரும் காலங்களில் பாஜக அதிமுக இடையேயான உரசல் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நிரந்தரமாக ஓரம் கட்டுவதோடு பாஜக தலைமைக்கும் அதிமுகவின் வலிமையை எடுத்துக் கூற இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என எடப்பாடி நினைக்கிறார் என்கின்றனர் சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications