இரட்டை தலையும் இரட்டை இலையும்! கிளை முதல் தலை வரை! பட்டியல் தயார் செய்யும் ஓபிஎஸ் டீம்! பரபர அதிமுக!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தரப்பில் ஆதரவாளர்களை அதிகரிக்கும் பொருட்டு மாநகர செயலாளர் முதல் கிளைச் செயலாளர் வரை புதிய பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க இருப்பதாகவும் இதன் காரணமாக பலரும் ஓபிஎஸ் தரப்பை அணுகி வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் மாறி மாறி நிர்வாகிகள் நியமனம் நீக்கம் என அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஓபிஎஸ் தரப்பு தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமனம், அரசியல் ஆலோசகர் நியமனம் என அதிரடி காட்டி வருகிறது.

அதிமுகவில் பரபரப்பு
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்து வருகிறார் ஓபிஎஸ். குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருபெரும் அதிமுக 'தலைகள்' இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை 3ஆக பிரிப்பதாகவும், அதற்கு தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை நியமிப்பதாகவும், ஓபிஎஸ் அதிரடி காட்டினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களே இல்லை என்ற நிலை மாறி இப்போது பலரும் அவரது முகாமில் இணைந்து வருகின்றனர்.

அணி தாவும் தலைகள்
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி தரும் வகையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பசும்பொன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ப. சுப்பிரமணியன், திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வைகை பாலன் ஆகியோரும், சேலம் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்களும் தற்போதும் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நகர், ஒன்றிய செயலாலர் பதவி தருவதாக கூறியதால் பலர் வர சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மாற்று பட்டியல்
இந்த நிலையில் தங்கள் தரப்புக்கு வரும் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் மேலும் பலரை இழுக்கும் வகையிலும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய அதிமுக நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வருகிறது. அந்த வகையில் மாவட்ட செயலாளர்கள் தவிர அவைத்தலைவர், மாநகர், செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர், பிரதிநிதி என பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் பட்டியலானது தயாராகி வருகிறது. இதற்காக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் அவர்கள் கீழ்மட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சென்றிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் அதிருப்தியாளர்களை குறி வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது பலரும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தங்களுக்கும் ஒரு கௌரவமான பதவி கிடைத்தால் ஆதரவு தெரிவிக்க தயார் என கூறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வரும் காலங்களில் அணி தாவும் படலங்கள் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications