இதே நிலை நீடித்தால்.. அதிமுக சிறிய கட்சியாக மாறிவிடும்.. ஆடிட்டர் குருமூர்த்தி!
சென்னை: அதிமுகவில் இதே நிலைமை நீடித்தால் அதிமுக கட்சி சிறிய கட்சியாக மாறிவிடும் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராஜ ராஜ சோழன் விவகாரம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குரூமூர்த்தி கூறியதாவது:- ''2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை.
பெயரே இல்லாத மதமாக இருந்ததால் வெளியில் இருந்தவர்கள்தான் பெயர் கொடுத்தனர். இதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், இது பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவுவுக்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என எனக்கு தோன்றுகிறது'' என்றார்.

ஆலோசனை கேட்டால் சொல்வேன்
அதிமுக உள்கட்சி மோதல் குறித்து செய்தியாளர்கள் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குருமூர்த்தி கூறியதாவது:- ''ஆலோசனை கேட்டால்தான் சொல்வேன். என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் அவங்கள பற்றி (அதிமுக) நான் ஏன் எழுதபோறேன். ஆலோசனை கேட்டால் தனிப்பட்ட முறையில் சொல்வோம். விமர்சனங்களை துக்ளக்கில் எழுதுவோம். கேட்காமல் யாருக்கும் நான் ஆலோசனை கொடுக்க மாட்டேன்'' என்றார்.

குடும்பத்தை எடுத்துவிட்டால் திமுக...
பின்னர் திமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, ''திமுக என்பது ஒரு கட்சியே கிடையாது. அந்த குடும்பத்தை எடுத்துவிட்டால் அதுவும் கட்சி கிடையது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் அதிமுகவின் முதுகெலும்பாக இருந்தார்களோ அதுபோல இந்த குடும்பம் முதுகெலும்பாக உள்ளது. இந்த குடும்பம் எவ்வளோ நாளைக்கு ஒற்றுமையா இருக்கோ.. அவ்ளோ நாளைக்கு திமுக இப்படி இருக்கும். குடும்பம் பிரியாத வரை ஒற்றுமை இருக்கும்'' என்றார்.

அதிமுகவை பாஜக பிரிக்காது
அதிமுக இணைப்பு விவகாரத்தில் பாஜக இந்த முறை பங்காற்றுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி கூறியதாவது:-''பாஜக என்ன செய்யும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் 2017-ல் என்னிடம் ஆலோசனை கேட்ட போது ஒற்றுமையாக இருப்பது நல்லது என்று நான் சொன்னேன். அதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை'' என்றார். மேலும், 'அதிமுகவை பாஜக பிளக்காது. அதிமுக பிளவு பட வேண்டும் என்று பாஜக நினைக்காது. ஆனால் பிளவுபடத்தான் செய்வோம் என நின்றால், நீங்கள் எப்படியாவது ஒன்னு சேருங்க.. என்று பாஜக சொல்லுமா என தெரியவில்லை' என்றார்.

சின்ன கட்சியாக இருக்கும்
எடப்பாடி மட்டுமே அதிமுகவின் அடையாளமாக இருந்தால் அதிமுகவின் நிலை என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, ''அதிமுக சின்ன கட்சியாக இருக்கும்'' என்றார். மேலும், அவர் கூறுகையில். 'அதிமுக என்பது திமுகவிற்கு எதிரான கட்சி. திமுகவிற்கு எதிரான உணர்வு அதனுடைய வாக்கு பலம்.. அதனுடைய சமுதாய வீச்சு.. இவையெல்லாம் பிரியும் போது, அதிமுகவில் இருந்து யார் பிரிந்தாலும் அது சின்ன கட்சியாகிவிடும். எல்லாமே பலவீனமாகத்தான் மாறும்' என்றார்.












Click it and Unblock the Notifications