திருட்டு பணத்தில் கணவருக்கு கடை.. அங்கிருந்து ஐஸ்வர்யா ரஜினி வீட்டிற்கு மளிகை பொருள் வாங்கிய ஈஸ்வரி
கணவரின் காய்கறி கடை, மகளின் மளிகை கடை மூலம் சரக்குகளை ஐஸ்வர்யா வீட்டுக்கு பெற்று மாதம் ரூ 50 ஆயிரம் லாபம் பார்த்துள்ளார் பணிப்பெண் ஈஸ்வரி.
சென்னை: கணவரின் காய்கறி கடை, மகளின் மளிகைக் கடையில் மாதாமாதம் பொருட்களை வாங்கி அதை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சமைத்து சொந்த குடும்பத்திற்கே ரூ 50 ஆயிரம் பெற்று தந்துள்ளார் பணிப்பெண் ஈஸ்வரி.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை பிரிந்து தனது தந்தையின் போயஸ் தோட்ட இல்லத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.
அதில் தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை. அவை வைரம், ரத்தினக் கற்களால் ஆனவை. 18 ஆண்டுகளாக அந்த நகைகளை சேர்த்து வைத்துள்ளேன். அவற்றில் பாரம்பரிய நகைகளும் இருந்துள்ளன. லாக்கரின் சாவியை நான் வைக்கும் இடம் எனது வீட்டு பணிப்பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.

சந்தேகம்
எனவே அவர்கள் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தன. பின்னர் முன்னாள் கணவர் தனுஷுடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறிய போது அங்கும் லாக்கர் கொண்டு செல்லப்பட்டது.

போயஸ் கார்டன்
இதைத் தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனில் குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது என புகாரில் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் ஐஸ்வர்யா, தனுஷ், ரஜினி வீட்டில் பணியாற்றியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் ஈஸ்வரி என்ற பணிப்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனுஷ் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டதாக தெரிகிறது.

போலீஸ் விசாரணை
உடனே அவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி மந்தைவெளியை சேர்ந்த ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து ஈஸ்வரி கூறுகையில், நான் ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். 2019 ஆம் ஆண்டு முதல் ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத நேரத்தில் நான் சிறுக சிறுக திருடினேன்.

டிரைவர் வெங்கடேசன்
இதை ஒரு நாள் டிரைவர் வெங்கடேசன் பார்த்துவிட்டார். இதனால் நான் திருடிய தொகையில் அவருக்கும் பங்கு கொடுப்பதாக கூறியதால் அவர் எனக்கு உடந்தையாக இருந்தார். காரில் செல்லும் ஐஸ்வர்யா எங்கே செல்கிறார், எப்போது வருகிறார் என்ற தகவல்களை வெங்கடேசன், எனக்கு அவ்வப்போது கொடுத்து வந்துள்ளார். இதனால் நான், ஐஸ்வர்யா வந்துவிடுவார் என்ற அச்சம் இல்லாமல் நகைகளை திருடி வந்தேன்.

வங்கிக் கணக்கில்
திருடிய நகைகளை ஒரு கடையில் விற்று அந்த பணத்தில் வெங்கடேசனுக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை எனது கணவர் அங்கமுத்துவின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவேன். இப்படி செய்து சோழிங்கநல்லூரில் ஒரு கோடியில் சொகுசு பங்களா வாங்கியுள்ளேன். எனது மகள் திருமணத்தை நடத்தியுள்ளேன். அத்துடன் எனது கணவருக்கு காய்கறி கடை வைத்து கொடுத்துள்ளேன்.

மளிகைக் கடை
இளைய மகளுக்கு மளிகைக் கடை வைத்துள்ளேன். தெருவுக்கு தெரு மளிகைக் கடையும் காய்கறி கடையும் இருக்கும் நிலையில் எங்கள் கடைகளில் யார் வந்து வாங்குவார்கள், நஷ்டம் ஏற்படும் என்ற கவலையே இல்லை. ஏனென்றால் ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஒன்றாக இருந்த போது வீட்டிற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை நான்தான் வாங்க செல்வேன்.

50 ஆயிரம் ரூபாய் மளிகை பொருட்கள்
அப்போது என் கணவர், மகளின் கடைகளில் பொருட்களை வாங்கி ஐஸ்வர்யா, தனுஷ் கொடுக்கும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிடுவேன். இவ்வாறு நான் மாதம் 50 ஆயிரம் வரை பொருட்களை எங்கள் சொந்த கடையிலேயே வாங்கியுள்ளேன். மேலும் எனக்கு ஐஸ்வர்யா மாத ஊதியமாக ரூ 30 ஆயிரம் கொடுத்து வந்தார் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெங்கடேசனையும் போலீஸார் கைது செய்தனர்.

ரூ 30 ஆயிரம் ஊதியம்
மாதம் ரூ 30 ஆயிரம் ஊதியம்... பணியாளர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு தங்களால் இயன்ற உதவி இவற்றை எல்லாம் நிச்சயம் முதலாளிகள் செய்வர். பணியாளர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்ததால்தான் ஐஸ்வர்யா அவர்கள் கண் முன்னே லாக்கர் சாவியை வைத்துள்ளார். இதெல்லாம் நம்பிக்கையின் அடையாளம் ! ஆனால் இத்தனை சலுகைகளையும் பெற்றுக் கொண்டு ஐஸ்வர்யாவுக்கு ஈஸ்வரி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இதன் மூலம் இனி சில இடங்களில் சில பணியாளர்களை சில முதலாளிகள் நம்பாத அளவுக்கு நடந்து கொண்டுவிட்டார் இந்த ஈஸ்வரி!












Click it and Unblock the Notifications