நீட் தேர்வு தாக்கம்.. நாளை அறிக்கை சமர்ப்பிக்கும் ஏ கே ராஜன் குழு.. தமிழ்நாடு அரசின் முடிவு என்ன?
சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இப்போது அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகவே அனைத்துக் கட்சிகளுக்கும் நிலைப்பாடு எடுத்துள்ளன.
ஏகே ராஜன் குழு
இந்நிலையில், நீட் தேர்வால் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்டு குழு கடந்த ஜூன் 10ஆம் தேதி அமைக்கப்பட்டது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
வழக்கு
தமிழ்நாடு அரசு நீட் தேர்வு குறித்து ஆராய அமைத்த இந்தக் குழுவை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
நாளை அறிக்கை
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 86 ஆயிரம் பேர் ஏகே ராஜன் குழுவிற்கு தங்கள் கருத்துகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு
முன்னதாக இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றும் இந்த ஆண்டு நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருந்தார்.