லாக்டவுன் மீது ஆசை... வாரிசாக வளர்க்க ஆசைப்பட்டு கடத்தினேன் - சென்னை வாலிபர் வாக்கு மூலம்
குழந்தைகள் மீது ஆசை இருந்ததால் லாக்டவுன் என்ற குழந்தையை கடத்தியுள்ளார் வாலிபர் ஒருவர். கடத்திய பின்னர் பேருந்தில் விட்டுச்சென்றது ஏன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார் அந்த இளைஞர்.
சென்னை: திருமணமாகவில்லை... நமக்கென்று ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கத்தில் குழந்தை லாக்டவுனை கடத்தி வளர்க்க ஆசைப்பட்டதாக அம்பத்தூர் காவல்நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்கு மூலம் அளித்துள்ளார். வாரிசாக வளர்க்க ஆசைப்பட்டு குழந்தையை கடத்தி இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அந்த இளைஞர்.
Recommended Video
குழந்தையை கடத்திய இளைஞரின் பெயர் பாலமுருகன். தான் ஏன் குழந்தையை கடத்தினேன் என்றும் பின்னர் எதற்காக பேருந்தில் விட்டு விட்டு வந்தேன் என்றும் போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அம்பத்தூர், காந்திநகர், தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த கிஷோர்,அவரது மனைவி புத்தினியின் லாக் டவுன் என்ற பெயர் கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போனது.

லாக்டவுனை தேடிய காவல்துறை
லாக்டவுனை காணாத பெற்றோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் தனிப்படை போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையங்கள் என குழந்தையை தேடும் பணியில் இரண்டு நாட்களாக தீவிரமாக ஈடுபட்டார்கள். குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர் காவல்துறையினர்.

பேருந்தில் உறங்கிய குழந்தை
குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து குழந்தையை தேடும் பணியிலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் திங்கட்கிழமையன்று இரவு 11 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின் இருக்கையில் ஆண் குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் குழந்தையின் அருகில் யாருமில்லை. இதனை கண்ட நடத்துனர் கோயம்பேடு காவல் நிலையம் சென்று தகவல் தெரிவித்திருக்கிறார்.

லாக்டவுன் மீட்பு
சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையாக இருக்கலாம் என சந்தேகித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் குழந்தையின் போட்டோவை வைத்துப் பார்த்ததில் தேடப்பட்டு வந்த குழந்தை லாக்டவுன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

கடத்தியது யார்?
இதன் பின்னர் அம்பத்தூர் போலீசார் குழந்தையின் தாய் தந்தையரை அழைத்துச் சென்று குழந்தையை அதிகாலை 01.00 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறை ஒரு இளைஞன் குழந்தையை தூக்கி செல்வதை கண்டு பிடித்தனர் ,மேலும் யார் அந்த நபர் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

கடத்திய இளைஞர் கைது
குழந்தையை தூக்கி சென்றது ரயில் விஹார் எனும் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சென்னை அடுத்த மறைமலை நகர் பகுதியில் இருந்த அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தையை வளர்க்க ஆசை
விசாரணையில் தான் இந்த கட்டுமான இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும், தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளதாகவும் கூறினார். தனக்கு திருமணமாகாத நிலையில் அவர்களை போன்று எனக்கும் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க ஆசையாக இருந்ததாகவும் கூறினார் பாலமுருகன்.

பேருந்தில் விட்டுச்சென்றது ஏன்
தனக்கென்று ஒரு வாரிசு வேண்டும் என நினைத்து கிஷோர் - புத்தினி தம்பதியரின் குழந்தை லாக் டவுனை அங்கு பணிபுரியும் ஒடிசா மாநில தொழிலாளி சுஷாந்த் பிரதான் உதவியுடன் கடத்தி சென்றதாகவும் கூறினார். கடத்திய குழந்தையை தனக்காக வளர்க்கும்படி தனக்கு தெரிந்த பெண்ணிடம் கேட்டுள்ளார் அதனை அவர் மறுக்கவே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து பேருந்தில் விட்டு விட்டு சென்றதை தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பாராட்டு
இதனை தொடர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட இருவரையும் கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தை லாக் டவுன் தூக்கி சென்றவர்களை விரைவாக செயல்பட்டு கைது செய்து குழந்தையை மீட்ட காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications