மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளிகள் திறக்கப்பட்டாலும்.. பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை.. தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் வரும் பிப். 1ஆம் தேதி முதல் +2 வரை அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது வைரஸ் பாதிப்பு உச்சத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த பல மாதங்களாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
பிப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு.. 4 நாள்தான் இருக்கிறது.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
பள்ளிகளுக்குத் தடை
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் கடந்த டிச. மாதம் ஓமிக்ரான் பரவ தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவ தொடங்கியது. 2ஆம் அலை சமயத்தை முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லை என்றாலும் கூட மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட. இரவு ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டன.
குறையும் கொரோனா
ஓமிக்ரான் காரணமாக ஏற்பட்ட 3ஆம் அலை சில வாரங்களில் இப்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றைய தினம் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் 3ஆம் அலை முடிவுக்கு வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
தளர்வுகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வுகள் குறித்து சுகாதார வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மாநிலத்தில் இரவு மற்றும் ஞாயிறு ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 1ஆம் வகுப்பு முதல் +2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நேரடி வகுப்புகளைத் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு அனுமதி
ஆன்லைன் வகுப்புகள் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குப் பாகுபாட்டை ஏற்படுத்துவதாகப் பல கல்வியாளர்கள் விமர்சித்து வரும் நிலையில், இந்த உத்தரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஓமிக்ரான் அச்சம் மாணவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்ப சில பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முக்கிய உத்தரவு
இது தொடர்பாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் கொரோனா குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதைப் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.