"நான் செய்த மிக பெரிய சேவை.. முஸ்லீம் சகோதரிகளும் என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.." பிரதமர் மோடி உருக்கம்
டெல்லி: 5 மாநில தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் என மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக நாளை மறுநாள், பிப் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அங்கு தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங். உடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது.

பிரதமர் மோடி
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி தனக்கு இஸ்லாமியப் பெண்களின் ஆசீர்வாதம் அதிகம் கிடைப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இன்று, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், முஸ்லிம் சகோதரிகளின் ஆசீர்வாதங்களை நான் பெறுகிறேன். ஏனென்றால் அவர்களைப் பாதுகாக்க நான் ஒரு பெரிய சேவையைச் செய்துள்ளேன். முத்தலாக் முறையில் திடீரென கணவரால் கைவிடப்பட்ட என் தாய்மார்கள், சகோதரிகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். அவர்கள் எங்கே போவார்கள்?

இஸ்லாமியப் பெண்கள்
இப்படி திடீரென கணவரால் கைவிடப்படும்போது, அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்லும் போது அவரின் பெற்றோர், குடும்பத்தினரின் நிலையை நினைத்துப் பாருங்கள். நான் தேர்தல் குறித்தும் வாக்குகள் குறித்தும் நினைத்திருந்தால், இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்து இருக்கலாம். ஆனால், நான் நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தான் நினைக்கிறேன். அதனால் தான் அதை நான் திட்டவட்டமாக எதிர்த்தேன். இப்படி இஸ்லாமியப் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் நான் பல திட்டங்களைக் கொண்டு வந்தேன். அதனால் தான் என்னை இஸ்லாமியப் பெண்கள் ஆசீர்வாதம் செய்கிறார்கள்" என்றார்.

உபி தேர்தல்
உத்தரப் பிரதேச தேர்தலை மனதில் வைத்தே பிரதமர் மோடி இப்படிப் பேசியுள்ளார். ஏனென்றால் உத்தரப் பிரதேசத்தில் இப்போது பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. அங்குப் பல தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளது. பொதுவாக, உபி-இல் இஸ்லாமியர்களின் வாக்குகள் சமாஜ்வாடி கட்சிக்கே செல்லும் நிலையில், அதைக் குறிவைத்தே பிரதமர் மோடி இப்படிப் பேசியுள்ளார். இதன் மூலம் குறைந்தபட்ச அளவு இஸ்லாமியப் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு வரும் என்பதே அவரது திட்டம்.

பிரதமர் அட்டாக்
முன்னதாக, முதற்கட்ட தேர்தல் முடிந்த உடனேயே இஸ்லாமிய வாக்காளர்களைக் குறிவைத்து, பிரதமர் மோடி பேசி வருகிறார். இதற்கு முன்பு, சஹாரன்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "முத்தலாக் கொடுமையிலிருந்து முஸ்லிம் சகோதரிகளை விடுவித்தோம். முஸ்லிம் சகோதரிகள் பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியபோது, சிலர் பதற்றமடைந்தனர். அவர்கள் முஸ்லிம் மகள்களை முன்னேற்றமடைய விடாமல் தடுக்க முயல்கிறார்கள். எங்கள் அரசு முஸ்லிம் பெண்களுடன் நிற்கிறது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

7 கட்ட தேர்தல்
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தபட்சம் 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும். அங்கு 2 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்து 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப். 20) நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகளும் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications