என்ன பேச்சு இது? வெடுக்கென்று சொன்ன விஜயபிரபாகரன்.. "அதிர்ந்து" நிற்கும் டிடிவி தரப்பு.. வார்னிங்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் விஜயபிரபாகரன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட ஒரு விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த தேமுதிக தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகி அமமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 40 இடங்கள் கேட்ட நிலையில் அதிமுக வெறும் 13 இடங்களே கொடுக்க முன் வந்தது.
இதையடுத்து அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அமமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேமுதிக தற்போது தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது .
அமமுக
அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ல் தேமுதிக வென்ற 29 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேமுதிக மீண்டும் போட்டியிடுகிறது. தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் 42 வேட்பாளர்களை அமமுக திரும்ப பெற்றுள்ளது. தற்போது தேமுதிக - அமமுக கூட்டணி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
பிரச்சாரம்
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்த உடனே அதிமுக தலைவர்களை தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் விஜயபிரபாகரன் கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை வீழ்த்துவோம், அதிமுகவை டெபாசிட் இழக்க வைப்போம். தேமுதிகவிற்கு மானமே முக்கியம், அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம் என்று தடாலடியாக விஜயபிரபாகரன் பேசினார். அவருக்கு பக்குவம் போதவில்லை என்று அதிமுக தலைவர்கள் விமர்சனம் வைத்தனர்
அதிர்ச்சி
கூட்டணியை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் விஜயபிரபாகரன் இப்படி பேசியது பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் தற்போது அமமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் விஜயபிரபாகரன், அமமுக - தேமுதிக கூட்டணி குறித்து பேசியதும் சர்ச்சையாகி உள்ளது. தூத்துக்குடியில் நேற்று பேசிய விஜயபிரபாகரன், தேமுதிக தமிழகத்தில் மிகவும் வலிமையாக இருக்கிறது.
வலிமை
இந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தனது வலிமையை நிரூபிக்கும். நாங்கள் யாரிடமும் கூட்டணி வேண்டும் என்று போய் நிற்கவில்லை. அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை. மாறாக தேமுதிக கூட்டணியில்தான் அமமுக இடம்பெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்று விஜயபிரபாகரன் தடாலடியாக குறிப்பிட்டுள்ளார்.
கோபம்
நாங்கள்தான் கூட்டணியின் தலைமை என்பது போல இவர் பேசி உள்ளார். விஜயபிரபாகரனின் இந்த பேச்சு இணையத்தில் அமமுகவினரை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அதிமுகவில் இடம் கிடைக்கவில்லை என்று அவர்கள்தான் அமமுகவினருக்கு வந்தனர். கூட்டணியில் எங்களை விட குறைந்த இடங்களில்தான் அவர்கள் போட்டியிடுகிறார்கள். அப்படி இருக்கும் போது கூட்டணி குறித்து இப்படி தவறாக வெளியே பேச கூடாது.
மோசம்
இது பக்குவமற்ற பேச்சு என்று அமமுக ஆதரவாளர்கள் இணையத்தில் குட்டு வைத்து வருகிறார்கள். தேமுதிக மிகவும் வலிமையான கட்சியாக இருக்கலாம் . அதிக வாக்கு வங்கி இருக்கலாம். அதற்காக கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியை, முக்கியமாக இடம் ஒதுக்கிய கட்சியை பற்றி இப்படி பேசுவது தவறு என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விமர்சனம்
விஜயபிரபாகரன் இப்படி பேசுவதை விட்டுவிட்டு தேர்தல் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தினகரன்தான் என்று பிரேமலதா 4 நாட்களுக்கு முன் சொன்ன நிலையில் தற்போது திடீரென விஜயபிரபாகரன் இப்படி பேசுவது சர்ச்சையாகி உள்ளது.