சூப்பர்.. வெறும் 10 குறள் சொன்னால் ஒரு ஹெட்செட் பரிசு.. ஒரே அறிவிப்பால் திக்குமுக்காடிய கரூர்..!
திருக்குறள் ஒப்புவித்தால் இயர்போன் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: திருக்குறள் சொன்னால் இயர் போன் இலவசம் என்ற அறிவிப்பால், ஒரு செல்போன் கடையில் மாணவ, மாணவியர்கள் குவிந்து வரும் சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது .
மாணவ, மாணவியர்கள் மத்தியில் திருக்குறள் படித்து கேள்விப்பட்டுள்ளோம்.. ஆனால் பெரியவர்களையும் திருக்குறள் ஒப்புவிக்க வைத்த பெருமை நம் போலீசாரையே சாரும்..
யாரெல்லாம் பைக்கில் ஹெல்மெட் போடாமல் வருகிறார்களோ, அவர்களுக்கு டிராபிக் போலீசார் திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனை வழங்குவார்கள்.. அல்லது மாஸ்க் போடாவிட்டாலும் இதேபோல, திருக்குறளை ஒப்புவிக்க சொல்வார்கள்.
பெட்ரோல்
தற்போது, பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழலில் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமத்தில் வள்ளுவர் பெட்ரோல் பங்க்கில் 10 திருக்குறள் ஒப்புவித்தால் அரை லிட்டர் பெட்ரோல், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு கரூரில் வெளியானது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
முயற்சி
இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது... அதனால், அந்த பங்க்கில் பொதுமக்கள் குவிய தொடங்கினர். தமிழ் மீது பற்றுள்ளவர்கள் தமிழை வளர்க்கும் முயற்சியில் இப்படியெல்லாம் முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதே கரூரில் வேறு ஒரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது..
இலவசம்
கரூர் செங்குந்த புரத்தில் ஸ்ரீயா மொபைல் என்கின்ற தனியார் செல்போன் கடையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் 10 திருக்குறள் சொன்னால் அவர்களுக்கு Ear Phone இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவினை தடுக்கும் மாஸ்க்கும் இலவசம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கேட்டதும், மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் அக்கடைக்கு தினமும படையெடுத்து வருகிறார்கள்..
விழிப்புணர்வு
10 திருக்குறள் சொல்லி, இலவசமாக கொரோனாவினை தடுக்கும் மாஸ்க் மற்றும் இலவச இயர் போனை இலவசமாகவும் வாங்கி செல்கின்றனர்.. கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் நடுவராக கலந்து கொண்டு இந்த பரிசுகளை வழங்கி வருகிறாராம். திருக்குறளை பொறுத்தவரை, எந்த மதத்தினையும் சமயத்தையும் சார்ந்தது இல்லை, அது உலக பொதுவானது என்பதால், அனைத்து தரப்பு மக்களுமே குறளை படிக்கவும், ஒப்புவிக்கவும் ஆர்வம் காட்டி வருவது பாராட்டத்தக்கது.