பிரசார் பாரதி அறிவிப்பு.. "முடக்க நினைக்கக் கூடாது.." கொந்தளிக்கும் பாமக அன்புமணி ராமதாஸ்!
சென்னை: தமிழகத்தில் மதுரை கோவை திருச்சி நெல்லை புதுவை ஆகிய பகுதிகளில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களை சொந்த நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து தொடர் ஒளிபரப்பு நிலையங்களாக குறைக்க முடிவு செய்துள்ள பிரசார் பாரதியின் முடிவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் பாமக இளைஞரணி தலைவரும் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பிரசார் பாரதியின் மூலம் தூர்தர்ஷன் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளில் தொலைக்காட்சிகள், ஆல் இண்டியா ரேடியோ, எஃப் எம் ரெயின்போ உள்ளிட்ட வானொலி நிலையங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருகிறது.
இங்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இன்னும் மின்சாரமே செல்லாத கடைக்கோடி இடங்களில்கூட வானொலிகள் வழங்கும் சேவை அளப்பரியது.

வானொலி சேவை
வானிலை எச்சரிக்கை போன்ற தகவல்களை அளிக்கும் வானொலி சேவை இந்தியாவில் அளப்பரியது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஐந்து வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பு பொங்கல் திருநாளில் இருந்து முடக்கி அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து தொடர் ஒளிபரப்பு நிலையங்கள் ஆதாரம் குறைக்க பிரசார் பாரதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அன்புமணி ராமதாஸ்
இதற்கு பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு அவை இப்போது உள்ள நிலையிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரசார் பாரதி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன என பதிவிட்டுள்ளார்.

வானொலியை முடக்க முயற்சி
தனது அடுத்த ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டு வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நான் கோரியிருந்த போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரசார்பாரதி விளக்கமளித்திருந்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன எனவும், ஒரு மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதுமானது என்று பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது என கூறியுள்ளார்.

பிரசார் பாரதிக்கு கண்டனம்
பிரசார் பாரதி எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் பண்பாட்டு பரவலையும், பகிர்தலையும் தடுக்கும் எனவும், அப்படி செய்யக் கூடாது 5 வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள் எனவும், எனவே இந்த முடிவை கைவிட்டு, 5 வானொலி நிலையங்களும் இப்போதுள்ளவாறே தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications