நான் கேஸ் போட்டா அண்ணாமலை ஜெயிலுக்கு போவார்! அரசியலுக்கு முழுக்கு போடுவார்.. ஆர்.எஸ்.பாரதி அட்டாக்
சென்னை: என் ஜாதகம் மோசமானது. நான் யார் மீதாவது புகார் கொடுத்தால் ஒன்று சிறைக்கு சென்றுவிடுவார், இல்லையேல் அரசியலை விட்டே விலகி விடுவார், தற்போது அண்ணாமலை சிக்கியிருக்கிறார் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் திமுக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கியது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் சிறை சென்றார். அது போல் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.

ஜாதகம்
என் ஜாதகம் ரொம்ப மோசமான ஜாதகம். நான் புகார் கொடுத்தால் புகாருக்குள்ளாகும் நபர் ஒன்று சிறைக்கு சென்றுவிடுவார். இல்லாவிட்டால் அரசியலை விட்டே விலகிவிடுவார். அப்படியொரு வித்தியாசமான ராசி என்னுடைய ராசி என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் ரூ 5 லட்சம் என்றும் அது குறித்து இதுவரை கணக்கு காட்டவில்லை. வாட்ச்க்கான ரசீது எங்கே என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி வருகிறார்.

திமுக ஐடி விங்
இதையே திமுக ஐடி விங் அமைப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனால் சமூகவலைதளங்களில் திமுக- பாஜக இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் அண்ணாமலையோ ரபேல் வாட்ச் பில் மட்டுமில்லை, என் சொத்து விவரங்களையும் வெளியிடுவேன். அது போல் திமுக அமைச்சர்களும் வெளியிட தயாரா என கேட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் அப்படியென்றால் பில்லை எக்ஸல் ஷீட்டில் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அந்த எக்ஸல் ஷீட் வரட்டு் பார்த்துக் கொள்ளலாம் என்றார். இப்படியாக அமைச்சர் செந்தில் பாலாஜி குடைந்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணாமலையோ என் வாட்ச் பில் கணக்கு மட்டுமில்ல, தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முதல்வர் உள்ளிட்டோரின் சொத்து கணக்குகளையும் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு
இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபுவோ, யார் சொத்து கணக்கை வேண்டுமானாலும் அண்ணாமலை தாராளமாக வெளியிடட்டும். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும். நாங்கள் எந்த தவறும் செய்யாத போது எங்கள் சொத்து கணக்கை வெளியிடுவது பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications