இன்ஷா அல்லாஹ்! பாரத் மாதா கி ஜே! அரசியலுக்காக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தல - சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் எதிரும் புதிருமான நிலையில் வைத்து சிலர் அரசியல் செய்து வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இஃப்தார் விருந்தில் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாடு பாஜக சார்பில் நேற்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாஜகவை சேர்ந்த வி.பி.துரைசாமி, கரு நாகராஜன், மதுவந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை பேச்சு
இந்த விழாவில் பேசிய அண்ணாமலை, "இஸ்லாமியர்களின் கடமைகளுல் முக்கியமானதாக கருதப்படும் ரமலான் நோன்பை தற்போது கடைபிடித்து வருகிறார்கள். புண்ணியமான இந்த காலத்தில் நல்ல மனதோடு அவர்கள் நோன்பு நோற்கின்றனர். உங்களோடு இந்த இஃப்தாரில் கலந்துகொள்வதை பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்.

பாஜகவும் சிறுபான்மையினரும்
பாஜக குறித்து புரியாதவர்கள், தெரியாதவர்கள் அரசியலுக்காக நாங்கள் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு பாஜகவை பொறுத்தவரை சிறுபான்மையினர்கள் அதில் ஒரு அங்கமாக இருக்கின்றனர். ஏராளமானவர்கள் நீண்ட காலமாக பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

பாஜகவின் சித்தாந்தம்
இந்தியாவில் ஒவ்வொருவரும் தங்களது கடவுள்களை விட்டுத் தருவது இல்லை. இதையே இந்தியாவும் விரும்புகிறது. பாஜகவின் சித்தாந்தம் பற்றி புரிந்துகொள்ளாமல் சிலர் இருக்கின்றனர். பாஜகவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு தேசியம் குறித்தும் தெரியும். இஸ்லாம் குறித்தும் முழுமையாக தெரியும்.

இஸ்லாமியர்களுக்கும் பங்குண்டு
பாஜகவில் இஸ்லாமியர்களுக்கும் பங்கு உள்ளது என்பதை அம்மக்கள் தெரிந்து வைத்து உள்ளனர். பாஜகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு தொடக்கத்தில் இருந்தே துணையாக இருந்து இருக்கின்றனர். பாஜகவில் அனைவருக்கும் இடம் இருக்கிறது. குடியரசுத் தலைவராக முதலில் இஸ்லாமியரான அப்துல் கலாமை செய்தது பாஜக. 2 வது முறை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை தேர்வு செய்தது.

வாக்கு வங்கி அரசியல்
சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் எதிரும் புதிருமாக வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.

இஸ்லாமியர்களுக்கு பாராட்டு
நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது இஸ்லாமியர்களின் ஜக்காத் வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்வேன். அங்கு இல்லாதவர்களுக்கு ஆட்டோ, ரிக்சா போன்றவற்றை இஸ்லாமியர்கள் வழங்குவார்கள். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுப்பது இஸ்லாம் மதத்தில் இருக்கும் சிறப்பான செயல். இஸ்லாமியர்கள் தாங்கள் வழிபடும் அல்லாஹ்வை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை.

இன்ஷா அல்லாஹ்! பாரத் மாதா கி ஜே!
இந்த புண்ணிய காலத்தில் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு அருகில் செல்கிறீர்கள். இறைவனுக்கு பிடித்த வேலையை செய்கிறீர்கள். ஏழை மக்களுக்கு கொடுக்கிறீர்கள். நல்லது நடக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று கூறி விடைப்பெறுகிறேன். அல்லாஹ் உங்களுக்கு எல்லா வளமும் கொடுக்கட்டும். நன்றி வணக்கம். பாரத் மாதா கி ஜே.!" என்று உரையை முடித்தார்.












Click it and Unblock the Notifications