ஆல் இஸ் நாட் வெல்.. நெல்லையை அடுத்து தேனியில் முளைத்த பேனர்.. அந்த ஒரு வாசகத்தால்.. தகிக்கும் அதிமுக
சென்னை: அதிமுகவில் தற்போது ஆல் இஸ் நாட் வெல் என்று சொல்லும் அளவிற்குதான் நிலைமை உள்ளது. முக்கியமாக பல்வேறு மாவட்டங்களில் முளைக்கும் பேனர்களால் அதிமுகவில் நிலவும் பூசல் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.
அதிமுகவை கட்டுப்படுத்துவது யார், அதிமுகவின் முகம் யார் என்பதுதான் தற்போது கட்சிக்குள் மோதல் நடக்க காரணம். எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் வந்தது. கடைசியில் ஒரு வழியாக எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ஓ.பன்னீர்செல்வம் இதை முழு மனதாக ஏற்றுக்கொள்ளவில்லை.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயும் குழு உறுப்பினர்கள் நியமனம்: 1 மாதத்தில் அறிக்கை தர அரசு உத்தரவு
ஒரு பக்கம் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மனஸ்தாபம் நிலவி வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் கட்சிக்குள் எண்டரி கொடுக்கும் திட்டத்தில் சசிகலா இருக்கிறார்.
அதிமுக
அதிமுகவை கைப்பற்றுவேன், கட்சியை எனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவேன், கட்சியை சரி செய்வேன், கட்சியை விரைவில் வழி நடத்துவேன் என்று சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா வரிசையாக போனில் பேசி கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாளர்களை சேர்த்து வருகிறார்.
ஆதரவு
அதிமுகவில் தற்போது யாருக்கு எவ்வளவு ஆதரவு என்ற மறைமுக யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் ஆதரவாளர்களை மண்டல வாரியாக திரட்ட ஓபிஎஸ் - இபிஎஸ் - சசிகலா என்று வரிசையாக முயன்று வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சிவி சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பேசியதும் கூட இதன் அறிகுறிதான் என்கிறார்கள்.
பலம்
கட்சியில் யாருக்கு அதிக பலம் என்பதை நிரூபிக்கும் விதமாக இப்படி நிர்வாகிகளை அழைத்து இபிஎஸ், ஓபிஎஸ் பேசி சீக்ரெட் ஆலோசனைகளையும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக நெல்லையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம், இதனால் இனி கட்சியினர் எல்லோரும் ஓபிஎஸ் சொல்படிதான் கேட்க வேண்டும் என்று நிறைய போஸ்டர்கள் நெல்லையில் ஒட்டப்பட்டுள்ளன.
பேனர்
நெல்லை போஸ்டர் காரணமாக அதிமுகவில் பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் , தற்போது தேனி பங்களாமேடு பகுதியில் அதிமுக மீனவரணி சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட மீனவரிணி செயலாளர் வைகை கருப்பு பங்களாமேடு பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
என்ன போஸ்டர்
அதில் "அதிமுக என்னும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே ஓபிஎஸ் உங்கள் தலைமையில் கழகத்தை வழிநடத்துவோம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரில் அதிமுகவை ஓபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் வாசகம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பிளக்ஸ் பேனரில் எடப்பாடி பழனிச்சாமி யின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வி
வன்னியர் இடஒதுக்கீடு காரணமாக தென் மாவட்டங்களிலும், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இபிஎஸ் எதிர்ப்பு நிலை நிலவி வருகிறது. இந்த இடஒதுக்கீடு விவகாரம்தான் தென் மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று கட்சியினர் இடையே பேச்சு உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுதான் இப்படி திடீர் போஸ்டர்கள் முளைக்க காரணம் என்கிறார்கள்.