தேர்தல் நடவடிக்கையாக.. ஒரே நாளில் 228 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.. டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் சென்னையில் பணிபுரியும் 228 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநில தேர்தல்களுடன் இணைந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த முறை திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி எனப் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்துக் கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாகப் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு பணியிட மாற்றமும் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் ஒரே நாளில் 228 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்கட்டமாக 112 காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 116 ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதவிர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 49 பேரையும் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணியிட மாற்ற உத்தரவுதான் இது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக மற்ற ஊர்களிலிருந்து சென்னைக்கும் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications