தமிழக அரசியலை உலுக்கிய "2 முக்கிய வழக்குகள்.." தீர்ப்பே வரவில்லை.. அடுத்த தேர்தலும் முடிஞ்சி போச்சு
சென்னை: கடந்த ஐந்து வருடங்களுக்குள் தமிழக அரசியலில் பெரும் புயலை உருவாக்கிய இரண்டு சம்பவங்களில், ஒரு முடிவு வராமல், அடுத்த தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று சொல்வார்களே அது இந்த இரு விஷயங்களிலும் முற்றிலும் உண்மைதான் என்றால் மிகையில்லை.
ஆம்.. ஒரு விஷயம் ராதாபுரம் தேர்தல் தொடர்பான வழக்கு. இன்னொன்று 11 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு. இந்த இரண்டிலும் இன்னமும் உச்சநீதிமன்றத்திலிருந்து முடிவு வெளியாகவில்லை.
ராதாபுரம் வழக்கு
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69 ஆயிரத்து 90 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரை எதிர்த்த திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே தேர்தல் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அப்பாவு. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளை எண்ணவேண்டும், 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று அப்பாவு கோரிக்கை விடுத்திருந்தார்.
தபால் ஓட்டு
இதையடுத்து வாக்குகளை எண்ணுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த பணிகள் நடைபெற்றன. ஆனால், இதை எதிர்த்து இன்பதுரை தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த தபால் வாக்குகள் உரிய கெசட் அலுவலரின் முத்திரை பெறவில்லை என்பதால் இதை எண்ணிய முடிவை அறிவிக்க கூடாது அது செல்லத்தக்கது அல்ல என்று இன்பதுரை தரப்பில் கூறப்பட்டது.
மீண்டும் போட்டி
தலைமை ஆசிரியர்கள் கெசட் அதிகாரிகளா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்தது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையை விபரத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை . அதற்குள் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. இப்போது மீண்டும் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பதுரை ஆகிய இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக மக்கள் தீர்ப்பு யார் பக்கம் என்ற ரிசல்ட் வரப்போகிறது என்பதே அங்கு நிலவரம்.
தர்மயுத்தம்
இதே போன்றுதான், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு வழக்கு 11 எம்எல்ஏக்கள் தொடர்பானது. சசிகலா மற்றும் அப்போது அவரது ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தினார் தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓ பன்னீர்செல்வம். 2017 ஆம் ஆண்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் என மொத்தம் 11 பேர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.
11 எம்எல்ஏக்கள் வழக்கு
இது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றச்செயல் என்று தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். தங்களை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு இவர்கள் மீீது ஏன் ஆக்ஷன் எடுக்கவில்லை என்பது அவர்கள் கேள்வி. ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றமும் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து விட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
திமுக வழக்கு
இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அதன்பிறகும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
முக்கிய வழக்குகள்
இந்த மனு, தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இதுவரை தீர்ப்பு வெளியாகவில்லை. ஒருவேளை தீர்ப்பு வெளியாகி இருந்தால் எடப்பாடி அரசு பெரும்பான்மை இல்லாமல் போயிருக்க வாய்ப்பு இருந்தது. ஆக மொத்தம் இந்த நாட்டையே உலுக்கிய இரு முக்கிய வழக்குகளில் ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாக 2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. இப்போது சொல்லுங்கள்.. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது எத்தனை தீர்க்கதரிசன வரிகள் இல்லையா.