துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அவ்வை நடராஜனுக்கு இறுதிச்சடங்கு.. மயிலாப்பூரில் உடல் நல்லடக்கம்
சென்னை: மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு காவல்துறையினர் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவ்வை நடராஜன் இறுதிச்சடங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு, வைரமுத்து, ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான அவ்வை நடராசன்,87 வயது முதிர்வின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவ்வை நடராசன் மிகச் சிறந்த தமிழறிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்தார் அவ்வை நடராஜன்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்து, தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் "சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு" என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958-ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் "சங்க காலப் புலமைச் செவ்வியர்" என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் விரிவுரையாளர்
மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இதன்பிறகு, டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளராக பணியாற்றினார். தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக அவ்வை நடராஜன் பணியாற்றினார். பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார்.

தமிழ் படைப்புகள்
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல் தமிழக அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான். இதுதவிர பல்வேறு பொறுப்புகளை வகித்தார். வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, பாரதி பல்சுவை, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம் உள்பட பல்வேறு படைப்புகளை வழங்கினார். தமிழக அரசின் கலைமாமணி விருது, பேரறிஞர் அண்ணா விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

காவல்துறை மரியாதை
அவ்வை நடராஜனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலையில் நேரில் சென்று அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவ்வை நடராசனின் தமிழ் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இறுதிச்சடங்கு
மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் இறுதி ஊர்வலம் பிற்பகலில் தொடங்கியது. அண்ணா நகர் இல்லத்தில் இருந்து மைலாப்பூர் மயானத்திற்கு அவ்வை நடராசன் உடல் கொண்டு செல்லப்பட்டது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன் உடலை சுமந்து சென்றனர். மயிலாப்பூர் மயானத்தில் காவல்துறையினர் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications