பாபர் மசூதி இடிப்பு தினம்.. பழனி முருகன் கோவில் உள்பட முக்கிய வழிபாட்டு தலங்களில் பலத்த பாதுகாப்பு
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஏற்படுத்தியது.

பாபர் மசூதி இடிப்பு தினம்
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டு தோறும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அந்த வகையில் ரயில், பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப திருவிழா
சென்னை எழும்பூர், செண்டிரல் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழாவும் கொண்டடப்படுகிறது. இதனால், போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேரடி ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 6 ஆம் தேதி நடைபெறும் தீபத் திருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதனால், அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிஜிபி சைலேந்திர பாபு திருவண்ணாமலையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று போலீசாரின் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசார்
அதேபோல், பழனி முருகன் கோவிலிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவில் மலை மீதும் கோயில் அடிவாரத்தின் மீதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் எடுத்து வரும் பைகளையும் தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். சமூக விரோதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு பணிகள்
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் ஈடுபட இருக்கின்றனர். நாளை முதல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. இரவு நேர தணிக்கையில் போலீசார் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கார்த்திகை தீப திருவிழா நடைபெறும் கோவில்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவ்வப்போது ரோந்து பணியிலும் தீவிரமாக போலீசார் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. கோவை கார்வெடிப்பு சம்பவம் மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் இந்த முறை சற்று கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications