Bank Strike: 2வது நாளாக இன்றும் நீடிக்கும் வங்கி வேலைநிறுத்த போராட்டம்.. முடங்கிய பல லட்சம் ரூபாய்!
சென்னை: நாடு முழுக்க பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று வங்கி காசோலை பரிவர்த்தனைகள் முடங்கின. இன்றும் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டம் நாடு முழுக்க நடக்க உள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்கட்டமாக 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்கான மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வங்கி வேலைநிறுத்தம்: பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்திய அரசு விரும்புவது ஏன்?
வங்கிகள்
வங்கிகள் சட்ட திருத்த மசோதா என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் படிப்படியாக மற்ற பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைதான் வங்கி ஊழியர்கள் எதிர்த்துள்ளனர். இதனால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டம்
இதை எதிர்த்து நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்தது. நேற்று நாடு முழுக்க வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி காசோலை பரிவர்த்தனைகள் முடங்கின. 5400 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் முடங்கின. இன்றும் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டம் நாடு முழுக்க நடக்க உள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 6500 பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ளன. இதில் 5800 வங்கி கிளைகள் வரை நேற்று செயல்படவில்லை. ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. சுமார் 80500 ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ஈடுபட்டனர். நாடு முழுக்க 12 லட்சம் ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேக்கம்
இந்த போராட்டம் காரணமாக நேற்று இந்தியாவில் 5.5 லட்சம் காசோலை பரிவத்தனை முடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இந்த போராட்டம் இன்றும் நடக்கும் என்பதால் காசோலை ரீதியான பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். மாறாக ஆன்லைன், ஏடிஎம் சேவைகள் எப்போதும் போல செயல்படும்.