"செத்துடலாம்னு இருக்கேன், கொல்றாங்களே".. கடைசி நேரத்தில் "கனிந்த" நெல்லை கண்ணன் மனம்.. உருகிய திமுக
: நெல்லை கண்ணன் திமுக மீதான கோபத்தை மெல்ல மெல்ல குறைத்து கொண்டார்
சென்னை: நெல்லை கண்ணன் தமிழ் மொழிக்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்றாலும், திமுகவுடன் அவரது பயணமானது, முரண்பட்டே வந்தது.. கடைசியில் இனித்தே கிடந்தது.
Recommended Video
தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்..
மிகச்சிறந்த பேச்சாளர்.. இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தையே மொத்தமாக கரைத்து குடித்தவர்.
Flash Back: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கண்ணீர் வடித்த நெல்லை கண்ணனின் உருக்கமான பேச்சு!
அவன் + இவன்
ஆன்மிக சொற்பொழிவில் பேசும்போதே அவன், இவன் என்று குறிப்பிட்டுத்தான், பொதுவெளியில் நெல்லை கண்ணன் பேசுவார்... அவ்வளவு ஏன், கம்பர் ராமாயணத்தில் ராமன், ராவணனையும் அவன், இவன் என்றுதான் பேசுவார்.. ஆனாலும், அவரது தமிழ் இனிக்கும்.. அதேசமயம், இவர் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை மிக்கவர்.. கருணாநிதியை நிறைய விமர்சித்து வந்ததுடன், ஒரு நாளிதழ் ஒன்றில், அதை பற்றி ஒரு தொடர் கட்டுரையே எழுதியவரும்கூட..
கருணாநிதி
1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர்.. அன்று அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.. ஆனால், அதிமுகவுக்காக இவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திமுகவை சரமாரியாக விமர்சித்ததை, அத்தொண்டர்கள் இப்போதுவரை மறக்கவில்லை.
கார்டன்
அரசியல் நிலைபாடுகளில் மட்டும் நெல்லை கண்ணன் உறுதிப்பிடிப்புடன் இல்லாதது அவரது ஆதரவாளர்களுக்கு எப்போதுமே வருத்தம்தான்.. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் திடீரென அதிமுகதான் சிறந்த கட்சி, ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று பேட்டி தந்தார்.. இந்த பேட்டி, ஜெயலலிதா கண்ணில் பட்டது.. உடனடியாக போயஸ் கார்டனுக்கு நெல்லை கண்ணனை வரவழைத்து பேசினார் ஜெயலலிதா.. அதற்கு பிறகுதான், 2006-ல் அதிமுகவுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கொல்றாங்க.. கொல்றாங்க..
அதைவிட இன்னொரு முக்கியமான சம்பவம், கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அந்த சம்பவம் குறித்து தமிழகமே அதிர்ந்து போயிருந்தது.. பலரும் தங்கள் கண்டனங்களையும், வருத்தத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் நெல்லை கண்ணன் மட்டும், கருணாநிதி கைதாகியபோது, "அய்யோ கொல்றாங்க, கொல்றாங்க" என்று எழுப்பிய சப்தத்தையும், கூக்குரலையும் கிண்டல் செய்து பேசினார்.. போதாக்குறைக்கு எந்த நேரமும் கருணாநிதியை காங்கிரஸ் சார்பாக திட்டிக் கொண்டே இருந்தார்.
காலச்சக்கரம்
ஆனால், கால சக்கரம் வேகமாக சுழன்றது.. நிறைய அனுபவங்கள் நெல்லை கண்ணனிடம் மெல்ல மெல்ல குடியேறியது.. மனஸ்தாபங்கள் விலகி, கரிசனங்கள் கூடின.. அந்த சமயத்தில் ஸ்டாலினும் முதல்வரானார்.. நெல்லை கண்ணனின் இயல்பும் அடியோடு திரும்பியது.. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, ஸ்டாலினையும், திமுகவையும் மாறி மாறி பாராட்டிக் கொண்டு இருந்தார்.. காமராஜரைப்போல் முழு நல்லவனாக உருவாகிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று ஓபனாகவே தன் ஆசையை கூறியவர்.
தழுதழுத்தது
அதுமட்டுமல்ல, விசிக விழா ஒன்றில், "இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை. உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் முதல்வரே., திருமா நீங்களும் உங்கள் நலனை பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் முதல்வராக பதிவேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றவுடன் உங்கள் துணைவியார் கண்கலங்கினார் அப்போது நானும் கண்கலங்கி விட்டேன். நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும்" என கண்ணீர் மல்க பேசியிருந்தார். அத்துடன் காமராஜரோடு முதல்வர் முதல்வர் ஸ்டாலினை ஒப்பிட்டு நெல்லை கண்ணன் பேசியது அந்த சமயத்தில் பேசுபொருளானது.
கிழவன் & உருக்கம்
இதற்கு பிறகு, பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று உருக்கமாக கூறியிருந்தது அனைவரையும் கலங்கடித்தது.. அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தைஅதிகப்படுத்த, அதற்காக மும்முரமாக உழைத்தவர் நெல்லை கண்ணன் ஆவார்..
அடிகளார்
சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி நடத்திய, "தமிழ் பேச்சு.. எங்கள் மூச்சு" என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார்.. இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் எண்ணற்ற தமிழ்ப்பற்றாளர்களை உருவாக்க காரணமாக இருந்தது.. இவர் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும், எந்த மேடையில் பேசினாலும், காமராஜரின் புகழை பேசாமல் இருந்ததே கிடையாது.. குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றிவர்... எந்த அளவுக்கு இவர் தமிழால் அறியப்பட்டாரோ, அந்த அளவுக்கு விமர்சனங்களிலும் சிக்கினார்..
"அனாதைகள்
திமுகவை மட்டுமல்ல, பலகாலம் பயணித்து வந்த காங்கிரஸையும் இவர் சீண்டாமல் விட்டுவைக்கவில்லை.. ஒருமுறை காங்கிரஸ் கட்சியினரை "அனாதைகள்" என்று விமர்சித்து, அவர்கள் என்னையும் ஒருநாள் அநாதையாக்குவார்கள் என்று அப்போது நினைக்கவில்லை என்று பேசி சொந்த கட்சியின் கடுப்பையும் சம்பாதித்து கொண்டார்.. உடல்நலம் குன்றிய நிலையிலும்கூட, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாகவே இருந்தார்.. ஆனால், கடந்த ஜூலை 4-ம் தேதிக்கு பிறகு எந்த பதிவுகளும் முகநூலில் இவர் எழுதவில்லை.
திமுக
காலம் முழுக்க திமுகவுடன் மல்லுக்கட்டி வந்தபோதிலும், கடைசி கட்டத்தில், அவரது உருக்கமான பேச்சும், நெகிழ்ச்சியான வார்த்தைகளும், திமுக மீதான அதிருப்தியை போக்கி, குளிர வைத்தது என்றே சொல்லலாம்.. எப்போதுமே, தன் உரையில் போகிற போக்கில் நகைச்சுவையை அள்ளி தெளிப்பதே இவரது ஆல் டைம் ஸ்பெஷாலிட்டி ஆகும்.. எத்தனையோ சர்ச்சைகள், பரபரப்புகளை இவர் ஏற்படுத்தினாலும், அவரது தமிழுக்கு, மாற்றுக்கட்சியினரும் ரசிகர்களாக இருந்ததே, இவரது ஆகச்சிறந்த சாதனை.. நெல்லை கண்ணனின் நற்றதமிழ் கடலில், இந்த மாநிலமே என்றென்றும் விழுந்தும், மூழ்கியும் கிடக்கும்..!