"நான் ஏன் அப்படி சொன்னேன் தெரியுமா!" மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 95% ஓவரா? ஜேபி நட்டா கொடுத்த விளக்கம்
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நட்டாவின் பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக அவரே முக்கிய விளக்கத்தைத் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இதன் மூலம் தமிழக மக்கள் அதிகம் பலன் பெறுவார்கள் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு கடந்த 2015இல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்கான இடத்தை தேர்வு செய்யவே சில மாதங்கள் வரை ஆனது.
''ஆந்தை அருகில் ஒரு அழகான பெண்ணின் முகம் இருக்கிறது''.. 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட்!
மதுரை எய்ம்ஸ்
அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் உட்பட்ட தோப்பூரில் அமையும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பு, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மிக விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை.
விவாதம்
சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சுற்றுச்சுவரைத் தவிர வேறு எந்தவொரு கட்டுமான பணிகளும் நடக்கவில்லை. கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுகவின் உதயநிதி ஒற்றை செங்கல்லை வைத்து எய்ம்ஸ் கட்டுமான பணிகளைச் சாடி இருந்தார். இது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் இப்போது மீண்டும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்த விவாதம் எழுந்து உள்ளது.
நட்டா
இரு நாள் பயணமாகத் தமிழகம் வந்துள்ள பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. அதில் அவர், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கா கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் எங்கு அமைக்கலாம் என்று சிக்கல் எழுந்த நிலையில், மதுரையில் கட்ட முடிவு செய்தோம். அதற்கான தொகை ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்" என்றார்.
நக்கல்
எய்ம்ஸ் குறித்த அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவியது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் சுற்றுச் சுவரைத் தவிர எதுவும் கட்டவில்லை என்று இணையத்தில் பலரும் சாடி வந்தனர், குறிப்பாக மதுரை எம்பி வெங்டேசன், "புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையைக் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கடிதத்தைத் தேடி நானும் மாணிக்கம் தாகூர் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்" என்று நக்கலாக பதிவிட்டு இருந்தார்..
நட்டா விளக்கம்
இந்தச் சூழலில் இது குறித்து ஜேபி நட்டா விளக்கம் அளித்து உள்ளார். சிவகங்கையில் இன்று பாஜக நிர்வாகிகள் உடனான மீட்டிங்கிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜேபி நட்டா, "எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த எனது பேச்சைக் கிண்டல் செய்து வருவதாக சொன்னார்கள். இதற்கு அண்ணாமலை விரிவான பதிலை விரைவில் அளிப்பார். இதைப் பற்றி எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
படித்த தலைவர்கள்
தயவு செய்து படித்த தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள். சொல்வதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருக்கும் படித்த தலைவர்களையாவது வைத்துக் கொள்ளுங்கள். முதலீடு என்றால் என்ன, ஆய்வு என்றால் என்ன என்பதைத் தெரிந்து வைத்துள்ள தலைவர்கள் தேவை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட பணிகளுக்கு 164 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது என நான் கூறினேன்.
என்ன சொன்னேன்
இந்தத் தகவல்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கான தலைவர்களாவது தேவை. நான் சொல்வதைப் புரிந்து கொண்டு பதில் அளிக்கும் அரசியல்வாதிகளாவது இங்குத் தேவை" என்று அவர் தெரிவித்தார். அதாவது தான் எய்ம்ஸ் மருத்துவமனை நிதி மற்றும் முதற்கட்ட பணிகள் குறித்துப் பேசியதாகவே நட்டா தெரிவித்து உள்ளார். இணையத்தில் அவரது பேச்சு வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.