அண்ணன் போனதும் திண்ணையை ஆக்கிரமிக்கும் பாஜக.. தேமுதிக சீட்டுகளையும் கேட்டு அதிமுகவிடம் அணத்தல்!
சென்னை: கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறிவிட்ட நிலையில் பாமக, பாஜக ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க அதிமுக முன்வந்தது. ஆனால் தேமுதிக இதனை ஏற்கவில்லை.
இதான் கணக்கு.. தெறிக்கவிட்ட இபிஎஸ்.. தொகுதிகள் தேர்வில் நினைத்ததை சாதித்த அதிமுக.. இன்று கிளைமேக்ஸ்
தேமுதிக விலகல்
அத்துடன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். தாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றார் விஜயகாந்த்.
பாமக, பாஜக புது கோரிக்கை
இதனையடுத்து அதிமுக கூட்டணியில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. தேமுதிகவை காரணமாக சொல்லித்தானே எங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்தீர்கள்.. இப்பதான் தேமுதிக இல்லையே.. தொகுதிகளை அதிகப்படுத்தி தாங்க என்று பாமக, பாஜக நெருக்கடி கொடுத்து வருகின்றனவாம்.
30 சீட் கேட்கும் பாஜக
எல்லாமும் முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இப்படி ஒரு சிக்கலா என அதிமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளதாம். பாமகவைப் பொறுத்தவரையில் மேலும் 5 தொகுதிகள் கேட்கிறதாம். பாஜகவோ மேலும் 10 தொகுதிகள் கேட்கிறதாம். அதாவது பாமக 28, பாஜக 30 என ஆசைப்படுகின்றனவாம்.
நெருக்கடியில் அதிமுக
ஏற்கனவே வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் யார் கை ஓங்கும் என்பதில் பெரும் பஞ்சாயத்தே அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது கூட்டணி கட்சிகள் ஆளுக்கு ஒரு திசையில் அம்புகளை வீசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியை எப்படி அதிமுக எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு.