"இரட்டை நாக்கு, இரட்டை வேடம்" பாஜக தேர்தல் அறிக்கையில் இலவசம்.. வெளுத்து வாங்கிய ராஜீவ் காந்தி!
சென்னை: இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. இதனை திமுகவின் ராஜீவ் காந்தி, இலவசங்கள் விவகாரத்தில் பாஜகவுக்கு இரட்டை நாக்கு, இரட்டை வேடம் என்று விமர்சித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவடைகிறது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் இமாச்சலப் பிரதேச தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை! 26 மனித உயிரிழப்புகள்.. 29 கால்நடை உயிரிழப்புகள்! 67 குடிசைகள்.. 66 மரங்கள் சேதம்
மோடி பரப்புரை
இந்த நிலையில் பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக இன்று இமாச்சல மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைநகர் சிம்லாவில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், பெண்களுக்கு அதிகாரமளித்தலே கட்சியின் முக்கிய நோக்கம் என்றும், சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம், சொல்லாததையும் செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இதனிடையே அண்மைக் காலமாக இலவசங்களுக்கு எதிராக பேசி வந்த பாஜக, தற்போது தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அறிவித்துள்ளது.
இலவச ஸ்கூட்டர்
குறிப்பாக மகளிருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அரசுப் பணிகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் என உறுதி அளித்துள்ளது. அதேபோல் 6 முதல் 12 வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இரட்டை நாக்கு, இரட்டை வேடம்
இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தர்மபுத்திரர்கள் போல் பேசுவது. நாங்கள் தான் மாற்றத்திற்கான யோக்கியர்கள் என வாய் கிழிய நீதிமன்றத்தில் பேசி இலவசங்களை எதிர்க்க வேண்டியது. தேர்தல் வந்தால் வாக்குறுதி கொடுப்பது. இரட்டை நாக்கு, இரட்டை வேடம். இடத்துக்கு ஒரு பேச்சு, மணிக்கு ஒரு வேஷம் என்று விமர்சித்துள்ளார்.
இலவசங்கள் பற்றி மோடி
ஜூலை மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேர்தல் நேரத்து இலவசங்கள் ஆபத்தானவை. நமது நாட்டில், தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை அள்ளிவீசும் ஒரு புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் ஆபத்து. இது போன்ற அறிவிப்புகள் குறித்து இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.