அரசியலுக்காக ஆதரவுக்கரம் நீட்டாமல் சமூக விரோதிகளை தண்டியுங்கள்- முதல்வருக்கு பாஜக நாராயணன் கோரிக்கை!
சென்னை : அரசியலுக்காக ஆதரவுக்கரம் நீட்டாமல், வன்முறையை கட்டவிழ்த்த சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த கலவரத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி வன்முறை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மாணவி மரணத்துக்கு நீதி வேண்டு நேற்று முன் தினம் பள்ளியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தீ வைத்தனர்.

அமைப்பு நிர்வாகிகள் கைது
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தந்தை பெரியார் திராவிட கழக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபு, , மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரம்
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்துள்ளது காவல்துறை. தொடர்ந்து இதுபோன்ற இயக்கங்கள் உணர்ச்சிகரமான, பதற்றம் நிறைந்த விவகாரங்களில் மக்களை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளன.

ஸ்டெர்லைட் போராட்டத்தில்
மக்களை ஒன்று சேர்க்கிறோம் என்று பிரச்சாரம் செய்து, கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து பின்னர் கலவரத்தை தூண்டும் வகையில் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, குறிப்பாக வாகனங்களை தீயிட்டு கொளுத்தி ஒரு பயங்கர கலவர சூழலை ஏற்படுத்துவது இவர்களின் நடைமுறையாக உள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் கூட மக்கள் திரண்டிருந்த போது வன்முறை ஏற்பட்டது. காவல்துறை வாகனங்கள் உட்பட பொதுமக்களின் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதன்காரணமாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர், மக்கள் அதிகாரம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர்தான் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதரவு
ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக காவல்துறையையும், அரசையும் கடுமையாக கண்டித்ததோடு மக்கள் அதிகாரம் உள்ளிட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே திமுக தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நேரத்தில், தமிழக காவல்துறை, கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம் என மக்கள் அதிகாரம் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளது.
Recommended Video

சமூக விரோதிகளை தண்டியுங்கள்
அரசியலுக்காக ஆதரவுக்கரம் நீட்டாமல், வன்முறையை கட்டவிழ்த்த சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வருவதோடு இந்த கலவரத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இல்லையேல், சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கும். தமிழகத்தில் வன்முறையை தூண்டும் இந்த இயக்கங்களை தடை செய்ய வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் நடந்த உண்மையை நாடறிய செய்ய வேண்டும். அது தற்கொலையாக இருந்தாலும், கொலையாக இருந்தாலும், காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications