புதுக் குழப்பம்.. ஜெய்சங்கருக்கு சீட் கேட்குதாமே பாஜக.. செம டென்ஷனில் அதிமுக!
Recommended Video
சென்னை: எச். ராஜா பெயர் அடிபட்டது, மேலும் சிலரது பெயர்களும் அடிபட்டன. தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். ஜெய்சங்கருக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாம் பாஜக.
வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெய்சங்கர் தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் எம்.பியாக தேர்வு செய்யப்படவேண்டும். அவரை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் அதிமுக தயங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஜெய்சங்கர் தனது பதவிக் காலத்தில் மோடிக்கு நெருக்கமானவராக மாறியதன் விளைவாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தேடி வந்துள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு அந்நாடு தடை விதித்திருந்தது. மோடி பலமுறை முயன்றும் அமெரிக்கா அவருக்கு விசா வழங்கவில்லை.
பின்னர் மோடி பிரதமர் ஆன பின்னர் அமெரிக்காவே மோடியை அழைக்கும்படி நிலைமை மாறியது. அதற்கு முக்கிய காரணம் ஜெய்சங்கர். அவரது லாபி காரணமாகவே மோடியை அமெரிக்கா அழைத்தது. இது ஜெய்சங்கரை மோடியுடன் நெருக்கமாக வைத்தது. தற்போது ஜெய்சங்கர் ஒய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் அவரை மத்திய அமைச்சராக மோடி நியமித்துள்ளார்.
எம்.பி. யாக தேர்வு செய்யப்படாத ஒருவர் அமைச்சர் ஆக நியமிக்கப்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் மாநிலங்களவைக்கோ அல்லது மக்களவைக்கோ தேர்வு செய்யப்படவேண்டும். அதனால் அவரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அசாமில் 2 இடங்களும், தமிழகத்தில் 6 இடங்களும் என மொத்தம் 8 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.
இதில் அசாமில் இருந்து பாஜகவுக்கு ஒரு நபரை மட்டுமே தேர்வு செய்யும் பலம் உள்ளது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களில் மூன்று இடங்களை அதிமுகவும், மூன்று இடங்களை திமுகவும் நிரப்ப முடியும். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவரை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய பாஜக எண்ணுகிறது. தனது கூட்டணி கட்சியான அதிமுகவில் இருந்து அவரை தேர்வு செய்ய பாஜக கணக்கு போட்டுள்ளது.
அதிமுக இப்போது மூன்று உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யலாம் என்ற நிலையில் தேர்தலுக்கு முன்னரே செய்யப்பட்டிருந்த கூட்டணி ஒப்பந்தப்படி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்து விட்டால் அதிமுகவிடம் இரண்டு இடங்கள் மட்டுமே மீதம் இருக்கும். இந்த இரண்டு இடங்களுக்கு இப்போதே அதிமுகவில் பலத்த போட்டி இருக்கின்ற சூழலில் இதில் இருந்து ஒரு இடத்தைத்தான் ஜெய்சங்கருக்காக பாஜக கேட்டு வருகிறது.
ஒரு வேளை மத்திய அமைச்சரவையில் 2 இடங்களைக் கொடுக்க பாஜக முன்வந்தால் அதற்கு ஈடாக, ஒரு இடத்தையோ அல்லது 2 ராஜ்யசபா சீட்டுகளையோ கூட அதிமுக பாஜகவுக்கு அளிக்க முன்வரலாம் என்று புதிய தகவல் கிளம்பியுள்ளது. இது கூட கட்சியினரை மிகுந்த சிரமப்பட்டு கட்டுப்படுத்திய பிறகே கொடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஆனால், பாஜகவின் தயவு இல்லையென்றால் தமிழகத்தில் ஆட்சியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் அதிமுக உணர்ந்தே வைத்துள்ளது. காரணம் இன்னும் 9 எம்.எல்.எ.க்கள் இருந்தால் திமுக ஆட்சியை பிடித்துவிடும் சூழல் இருக்கிறது. ஆகவே அதிமுக இப்போது இருதலை கொள்ளி எறும்பாக தவித்து வருகிறது.